திருப்பத்தூர்:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதியதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.110 கோடியில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகம், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். விழாவின் நிகழ்வுகளை முடித்த முதலமைச்சர் ஸ்டாலின், பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, “நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்டதும், 1,500 ஆண்டுகள் பழமையான சோழ, விஜய நகர ஹாய்சாய்கள் ஆண்டதும்தான் திருப்பத்தூர். 16ஆம் நூற்றாண்டில் திருவனபுரம் பெயர் மாறி, தற்போது திருப்பத்தூர் ஆகியுள்ளது. 10 புனிதமான ஊர் இருந்ததால் திருப்பத்தூர் என்றும் அழைக்கப்படுகிறது. ஜவ்வாது மலைத் தொடர்களை கொண்ட ஏலகிரி மலையை கொண்ட இயற்கை சூழலில் அமைந்துள்ளது, திருப்பத்தூர் மாவட்டம்.
நிறைவேற்றிய திட்டங்கள்: இம்மாவட்டத்தில் 1,703 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. 1,741 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. 85 லட்சம் மகளிர், இலவசப் பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர். 20,518 பேரின் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம் பேர் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ மூலம் பயன் பெற்றுள்ளார்கள். ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் மூலம் 196 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.
முக்கிய அறிவிப்புகள்: கொல்லகுப்பம், வடங்குப்பம், கொடும்பாம்பள்ளி ஆகியப் பகுதிகளில் பாம்பாறு மீது பாலம் கட்டப்படும். ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளம் ரூ.2,98,00,000 மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். ஆண்டியப்பனூரில் படகு குளம், ஆம்பூர் ஊட்டல் சரஸ்வதி கோயில் மேம்பாடு செய்யப்படும். ஏலகிரி ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படும். நாட்றம்பள்ளியில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.