திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பைனான்சியர் ஞானசேகரன். இவர் தனது காரில் ரூ.25 லட்சம் பணத்தை எடுத்துகொண்டு நண்பர்களுடன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலிருந்து தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
ரூ.25 லட்சம் கொள்ளை
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தின் மீது அவர்களை பின்தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்த அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல், திடீரென ஞானசேகரனின் காரை மடக்கி காரில் இருந்தவர்களை சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு காரிலிருந்த பணத்தை எடுத்துகொண்டு தப்ப முயன்றனர்.
ஆனால், ஞானசேகரனின் நண்பர்கள் கொள்ளை கும்பலை மடக்கினர். அப்போது அவர்களுக்குள் கடும் மோதல் ஏற்பட்டது. இதில், கார் கண்ணாடிகள் உடைந்தன. ஞானசேகரனின் நண்பர் ஒருவர் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் இருந்த சாவியை எடுத்து மேம்பாலத்திலிருந்து 100 அடி பள்ளத்தில் வீசிவிட்டார். இதனால் காரில் தப்பமுடியாது கொள்ளை கும்பல் அங்கிருந்து பணத்துடன் தப்பி ஓடினர்.
காவல் துறை விசாரணை
இது குறித்து ஞானசேகரன் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கொள்ளையர்கள் விட்டுச் சென்ற காரை சோதனை செய்தபோது காரில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.