தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருதாணி வைத்ததற்காக மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்... பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி - school students were beaten brutally in vellore

ஆம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் தாக்கியதில் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வரும் ஆசிரியரை பணியிடமாற்றம் செய்யக்கோரி, பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளி முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூரில் 8 வகுப்பு பள்ளி மாணவியை தாக்கிய ஆங்கில ஆசிரியர்
ஆம்பூரில் 8 வகுப்பு பள்ளி மாணவியை தாக்கிய ஆங்கில ஆசிரியர்

By

Published : Jul 12, 2023, 4:44 PM IST

ஆம்பூரில் 8ஆம் வகுப்பு பள்ளி மாணவியைத் தாக்கிய ஆங்கில ஆசிரியர்

திருப்பத்தூர்:ஆம்பூர் இரண்டாவது தார்வழி பகுதியைச் சேர்ந்தவர், வெங்கடேசன். லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவருக்கு மதுமிதா(13) என்ற மகள் உள்ளார். மதுமிதா ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருபவர், நூர்அஹமத். இவர் மாணவி மதுமிதாவிடம் விடுமுறை விண்ணப்பம் எழுதச் சொல்லியும், மாணவி கையில் மருதாணி வைத்திருந்ததை கண்டித்தும் மாணவியை வகுப்பறை பலகையைக் கொண்டு தாக்கியுள்ளார். மேலும் அவர் மாணவியின் கையைப் பிடித்து, திருப்பி பலமாக தாக்கியதில், கை மணிக்கட்டுப் பகுதியில் மாணவி பலத்த காயமடைந்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட வலியால் மாணவி வகுப்பறையில் சோர்வாகவே இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்குச் சென்ற மாணவி சோர்வுடன் இருந்ததைக் கண்டு பெற்றோர் விசாரித்த போது, ஆசிரியர் தாக்கியதில் கையில் பலத்த காயமடைந்தது தெரியவந்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், செய்வதறியாமல் சிகிச்சைக்காக மாணவியை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் மாணவி தாக்கப்பட்டது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தலைமை ஆசிரியர் பெற்றோரிடம் உறுதியளித்துள்ளார். சிகிச்சைக்குப் பிறகு, பள்ளி மாணவி மீண்டும் பள்ளிக்கு சென்றபோது, அதே ஆங்கில ஆசிரியரால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த பெற்றோர், பள்ளி வளாகத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோன்று பலமுறை பல மாணவிகளைத் தொடர்ந்து தாக்கியும், ஆங்கில ஆசிரியர் நூர்அஹமத் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனக் கூறி பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளியில் திரண்டு தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவியை தாக்கிய ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் நகர காவல் துறையினர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு இது சம்பந்தமாக புகார் தெரிவித்துள்ளதாகவும், ஆங்கில ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை ஆசிரியர் உறுதியளித்தற்குப் பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பள்ளி மாணவியை தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியரை பணியிடம் மாற்றம் செய்யக்கோரி பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளியில் திரண்டு தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:CCTV: அழகு நிலையத்தில் புகுந்து ஆட்டையைப் போட்ட நபர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details