திருப்பத்தூர் : திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு, சமூக ஆர்வலர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் 600 ஆண்டுகள் பழமையான அரிய வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய செப்புப்பட்டயத்தினைக் கண்டறிந்தனர்.
இது குறித்து முனைவர் ஆ.பிரபு கூறியதாவது, "திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவணப்படுத்தப்படாத எண்ணற்ற வரலாற்றுத் தடயங்களை நாங்கள் வெளிப்படுத்தி வருகின்றோம்.
அவ்வகையில் நாங்கள் வழக்கமான கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டபோது, இயற்கை மீட்பு அறக்கட்டளையினைச் சார்ந்த கால்நடை மருத்துவர் அன்புச் செல்வம் அளித்த தகவலின் அடிப்படையில் நடுகல் ஒன்றைக் காண அகரம் என்ற இடத்திற்குச் சென்றோம்.
பழமை வாய்ந்த செப்புப் பட்டயம் அப்போது, அவ்வூரில் உள்ள லட்சுமி நாராயணசுவாமி திருக்கோவில் தர்மகர்த்தா பலராமன் என்பவர் செப்புப்பட்டயம் ஒன்று இருப்பதாகத தெரிவித்தார். அச்செப்புப் பட்டயத்தினைப் பெற்று சுத்தம் செய்து படித்தபோது, அப்பட்டயம் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்தது என்பதை அறியமுடிந்தது. பட்டயத்தில் இவரது மெய்க்கீர்த்தி சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது." என்றார்.
செப்பு பட்டயத்தின் தோற்றம்
செப்புப்பட்டயமானது 615கிராம் எடையோடு, 36 செ.மீ நீளமும், 23.5 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது. இரண்டு பகுதிகளாக உள்ள இதனை துளையிட்டு வளையங்களால் இணைத்துள்ளனர்.
மேற்புறம் அழகிய வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டு, சூரியன், பிறைச்சந்திரன் சாட்சியங்களாகவும், அதன் கீழே வலதுபுறம் விநாயகர், இடது புறம் காளை உருவமும் நடுவே சிவ லிங்கமும் வரையப்பட்டுள்ளன.
செப்பு பட்டயத்தில் உள்ள விவரங்கள்
இவற்றின் கீழே ”சிவன்துணை ஸ்ரீஅருணாத்திரி யீஸ்வரர் சாதனப் பட்டயம்” என்று தொடங்கி 46 வரிகள் எழுதப்பட்டுள்ளன. கி.பி. 1515ஆம் ஆண்டு எழுதப்பட்ட இப்பட்டயம் திருவண்ணாமலை ‘தனியூர்’ தகுதி பெற்றிருந்ததை விளக்குகின்றது.
தொண்டை மண்டலத்தில் உள்ள 24 கோட்டங்கள், 79 வளநாடுகளில் வாழும் பெரியநாட்டவர்கள் எனப்படும் சைவ வேளாளர்கள் இணைந்து திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கல்யாணத்திற்கும் அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நந்தவனப் பராமரிப்புக்கும் நன்கொடை வழங்கியதை அறிவிக்கின்றது.
இதனைப் பாதுகாப்பவருக்கு வாக்கு சகாயம், சரீர சகாயம், அறத்த சகாயம் கிடைப்பதோடு; கோதானம், பூதானம், கன்னிகாதானம், அன்னதானம், சொர்னதானம், வலைத்திரதானம் பெறக்கடவது என்று எழுதப்பட்டுள்ளது.
இதற்குத் தீங்கு விளைவிப்போர் பசுவைக்கொன்ற, சிசுவைக் கொன்ற தோஷத்தையும் பிரம்மஹத்தி தோஷத்தையும் பெறுவார்கள் என விவரிக்கப்பட்டுள்ளது. தொண்டை மண்டலமானது 24 கோட்டங்களை உள்ளடக்கியது என விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
அவை, புழல் கோட்டம் ,புலியனூர் கோட்டம், மடியகாட்டுக் கோட்டம், மண்ணூர் கோட்டம், செங்காடுக் கோட்டம், பயனூர் கோட்டம், என குறிக்கப்பட்டுள்ளது
மேலும் எயில் கோட்டம், தாமல் கோட்டம், ஊத்துக்காட்டு கோட்டம், களத்தூர் கோட்டம், செம்மூர் கோட்டம், இத்தூர் கோட்டம், எனவும் குறிக்கப்பட்டுள்ளது.
அரிய வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய இச்செப்புப்பட்டயம் தொண்டைமண்டல வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததது என்றும், இது குறித்த மேலாய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம் என்று முனைவர் பிரபு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7% இடஒதுக்கீடு - அரசாணை வெளியீடு