தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 25, 2020, 7:19 AM IST

ETV Bharat / state

தூத்துக்குடியில் கரோனா தொற்றால் இளைஞர் உயிரிழப்பு!

தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு  சிகிச்சைக்குப் பெற்றுவந்த இளைஞர் உயிரிழந்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் இளைஞர் உயிரிழப்பு
கரோனா தொற்றால் இளைஞர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அருளானந்தம் (34). இவர் சென்னையில் உள்ள மீன் பதப்படுத்தும் லாரியில் ஓட்டுநராக வேலை பார்த்துவந்தார். இந்நிலையில் அங்கு உடல் நலம் சரியில்லாமல் போகவே மீன் பதப்படுத்தும் லாரியில் ஏறி சென்னையிலிருந்து தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலை என்ற இடத்தில் இறங்கியுள்ளார்.

அப்போது அவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவரது நண்பரை அழைத்துக்கொண்டு, தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார். தொடர்ந்து நோயின் தாக்கம் குறையாத காரணத்தினால் அங்கிருந்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐஎம்சியூவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர், தான் சென்னையிலிருந்து வந்ததாகக் கூறியுள்ளார்.

இதனால் அவருக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 23) அவருக்கு மூச்சுத்திணறல் இருந்ததாலும், சம்பந்தப்பட்ட நபரின் உடல்நிலை சற்று மோசமாக இருந்ததாலும், செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்குச் மருத்துவம் அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று (ஜூந் 24) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து பலத்த காவல் துறை பாதுகாப்புடன் அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து கொண்டுவரப்பட்டு டிவிடி சிக்னல் அருகில் உள்ள மையவாடியில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தூத்துக்குடி நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினரின் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் இளைஞரின் உடல் சிதம்பர நகர் மையவாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் தலைமையிலான மாநகராட்சி சுகாதாரக் குழுவினர் இளைஞரின் உடலை 15 அடி ஆழத்தில் வைத்து புதைத்தனர். தகனக்குழியில் ஒவ்வொரு இரண்டு அடிக்கும் கிருமிநாசினி கலவை தூவப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் இப்பணிகளில் ஈடுபட்ட மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறை உள்ளிட்டோர் முழுஉடல் கவச உடையினை அணிந்து செயல்பட்டனர். கரோனா நோயால் பலியான இவருக்கு கடலாடியில் உறவினர்கள் பலர் இருந்தாலும், கரோனா அச்சத்தின் காரணமாக அவரின் உடல் தகனத்தில் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இதையும் படிங்க:தந்தை, மகன் சிறை மரணம் - தமிழ்நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப்படும்

ABOUT THE AUTHOR

...view details