மதுரை:தூத்துக்குடி மாவட்டம் குலசேகரநத்ததைச் சேர்ந்த சரவணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில், "தாமிரபரணி ஆற்றிலிருந்து சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக மாவடி பண்ணை முதல் ஏரல் மேலமங்கலம் குறிச்சி வரை, முறைகேடாக மணல் சாலை அமைத்து, பல ஆண்டுகளாக மணல் அள்ளி வருகின்றனர்.
இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு இந்தப் பகுதியில் ஏராளமான சட்டவிரோதச் செயல்களும் நடைபெற்று வருகின்றன.
நடவடிக்கை எடுக்கப்படாத அவலம்
இதுகுறித்து நடவடிக்கைகோரி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு வழங்கியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நிபுணர் குழு அமைத்து ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து புன்னக்காயல் வரை எவ்வளவு மணல் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய இடைக்கால உத்தரவிட வேண்டும்.
மேலும், மாவடி பண்ணை முதல் ஏரல் மேலமங்கலம் குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள மணல் சாலையை அகற்றவும், முறைகேடாகப் பல கோடி மதிப்புள்ள மணலை அள்ளி விற்று வருபவர்கள் மீதும், இவர்களுக்கு இதுநாள்வரை உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு மனுதாரர் புகார் தெரிவித்துள்ள இடத்தில் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?
அங்கு சட்டவிரோதச் செயல்கள் நடைபெற்றதா? என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க, உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மூங்கில் காட்டுக்குள் பதுங்கிய ஆட்கொல்லி புலி - சுற்றிவளைத்து பிடிக்க வன அலுவலர்கள் தீவிரம்