தூத்துக்குடி:திருநெல்வேலியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "தமிழக ஆளுநர் ரவி குதர்க்கமான கருத்துகளை பேசி வருவதாகவும், தமிழ்நாடு என்றாலும், தமிழகம் என்றாலும் ஒன்று தான், தமிழ்நாடு தவறான சொல் என்ற தோற்றத்தை ஆளுநர் உருவாக்குகிறார் என்று தெரிவித்தார்.
ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம் என்றாலும் நாடு என்று தான் பொருள். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு சென்று பிரதேஷ், ராஷ்டிரா என்று இருக்கிறது என்று ஆளுநர் சொல்வார என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு, வட மொழியில் ராஷ்டிரம், பிரதேஷ் என ஒவ்வோரு மாநிலத்திலும் அந்தந்த உணர்வுகளுக்கு ஏற்ப வேறுபடுவதாக கூறினார். பெரியார், அண்ணா முன்னெடுத்த அரசியலை வேண்டுமென்றே பழிப்பதற்கான, கருத்து தோற்றத்தை ஆளுநர் உருவாக்க விரும்புவதாக தெரிவித்தார்.
ஆளுநர் அரசியலமைப்பின் சட்டப் பிரதிநிதி என்றும் ஆனால் அவர் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் அது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிப்பது என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார். வேண்டுமென்றால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகள் அவர் மேற்கொள்ளலாம் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழ்நாடு, தமிழகம் ஒரே பொருள் தான். காமராஜர், அண்ணா காலத்திலேயே சட்ட பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றபட்டு மத்திய அரசின் ஒப்புகையோடு பயன்பாட்டில் இருந்து வருவதாக கூறிய திருமாவளவன் ஆளுநரின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். திமுக அரசின் கொள்கைக்கும், திராவிட அரசியல் கோட்பாட்டிருக்கும் ஆளுநர் எதிராக செயல்படுவதாகவும், திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை முன்னிறுத்தி சட்டப் பேரவையில் உரை நிகழ்த்த அவர் எந்த வகையிலும் தகுதி படைத்தவர் இல்லை என்று தெரிவித்தார்.