தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 22, 2022, 3:18 PM IST

ETV Bharat / state

முத்துநகர் மாநகரை முத்தமிட்ட திராவிட முன்னேற்றக் கழகம்

தனிப்பெரும்பான்மையுடன் தூத்துக்குடி மாநகராட்சியை திமுக கைப்பற்றியது.

மாநகராட்சியை கைப்பற்றியது திமுக
மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (பிப்ரவரி 22) நடைபெற்றுவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக ஒன்பது இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தீவிர சோதனை

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு காலையிலேயே, வேட்பாளர்கள், அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்தனர். இவர்கள், காவல் துறையினரின் கடும் சோதனைக்குப் பிறகே வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் அனுமதிக்கப்பட்டனர்.

60 வார்டுகள் கொண்ட தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை வ.உ. சிதம்பரனார் பொறியியல் கல்லூரியில் காலை 8 மணிக்குத் தொடங்கியது.

மாநகராட்சியைக் கைப்பற்றியது திமுக

முதற்கட்டமாக அஞ்சல் வாக்குகள்‌ எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கைக்காக முதல் தளத்தில் 15 மேசைகளும், 2ஆவது தளத்தில் 15 மேசைகளும் போடப்பட்டிருந்தன. வார்டு எண் 1 முதல் 30ஆவது வார்டுவரை முதல் தளத்திலும், 31 முதல் 60ஆவது வார்டு வரை இரண்டாவது தளத்திலும் வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை

ஒவ்வொரு மேசைகளுக்கும் தனித்தனியாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய திமுக வேட்பாளர்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை மதியம் ஒரு மணிக்கெல்லாம் நிறைவுபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 44 வார்டுகள், காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 வார்டுகள், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் 2 வார்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு வார்டிலும் வெற்றிபெற்றுள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 6 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் நான்கு வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

திமுக கூட்டணி சாதனை

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின்படி, 11 ஆண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி மாநகராட்சியை திமுக, தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் திமுக, அதன் கூட்டணி கட்சியினர் 50 இடங்களைப் பிடித்தது சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுக மாபெரும் வெற்றி: ஸ்டாலினை சந்தித்து மூத்த நிர்வாகிகள் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details