தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்த ஆணைய அலுவலர் மாதம் தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தார். அதன்படி ஏற்கனவே 20 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 465 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 634 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டன.