தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் உள்ள தெற்கு காரசேரி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வரும் கல் குவாரியை இழுத்து மூட வேண்டும் என்று அவ்வூர் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
அப்போது தெற்கு காரசேரியினைச் சேர்ந்த சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தாலுகா, தெற்கு காரசேரி பகுதியில் சுமார் 100 வீடுகளில் மக்கள் வசித்து வரும் நிலையில், கல்குவாரியால் நீர், நிலம் மற்றும் விவசாயம் பாதிப்பு அடைகிறது.
கல் குவாரிக்கு தினமும் 800 கனரக வாகனங்கள் வருவதால் பொதுமக்களுக்கு உயிர் பலி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம், கிராம வளர்ச்சி பாதிப்படைகிறது. மேலும், கல்குவாரி உரிமையாளரிடம் சேரகுளம் காவல் துறையினர் கையூட்டு பெற்றுக்கொண்டு, இளைஞர்கள் மீது எதிர்காலம் பாதிப்படையும் வகையில் பொய் வழக்குப் போடுகிறார்கள்.