தூத்துக்குடி:முத்தையாபுரத்தில் உள்ள தோப்பு தெருவில் ஸ்ரீமாளிகைபாறை கருப்பசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் முருகன், ஆஞ்சிநேயர், விநாயகர் சிலைகளும் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அன்று கொடை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் சாமி அரிவாள் மீது ஏறி, மது அருந்தி குறி சொல்வது தான் சிறப்பு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற கொடை விழாவில், இன்று (ஆக12) சாமிக்கு கிடா பலியிடப்பட்டது. பக்தர்களின் படை சூழ, சாமிக்கு நேர்த்திகடனாக, பல்வேறு வகையிலான மது பாட்டில்கள் அங்கே காணிக்கையாக குவிக்கப்பட்டுன. மதிய நேரத்தில் சாமி அருள்வாக்கு சொல்லும் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது, அரோகரா..அரோகரா.. என்ற கோஷமும், விசில் சத்தமும் விண்ணை பிளக்க, நிகழ்ச்சி களைகட்டியது. அப்போது திடீரென இருவர் அரிவாளை பிடிக்க, நால்வர் சாமியை பிடிக்க திடீரென அரிவாள் மீது ஏறி அதில் நின்றவாறே மது பாட்டில்களை திறந்து மட, மடவென குடிக்க துவங்கினார்.
இடையிடையே அவருக்கு என விதவிதமாக சமைக்கப்பட்ட சுடப்பட்ட ஈரல், ஆட்டு கால், மட்டன் என வித, விதமாக கொடுக்கப்பட்டது. பின்னர் 2 சுருட்டை வாயில் வைத்தும், மது பாட்டிலை இடையில் வைத்து புகைத்து தள்ளினார். தொடர்ந்து மதுவைக் குடித்துக் கொண்டிருந்த சாமியிடம் ஒரு பெண்மணி ரோஜா மாலையும், மது பாட்டிலையும் கொடுத்து எனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகிற்று என்றார். அதற்கு சாமி ஆட்டத்தில் இருந்த அந்த நபர், 'நீ பல்வேறு கோயில்களுக்கு சென்று என்னிடம் வந்தாய்.. அப்போது உன்னிடம் 21 மது பாட்டில்கள் வாங்கி வர சொன்னேன்.. நீயும் வாங்கி வந்தாய்.. உனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தேன்' என்று சொன்னார்.
அதன் பின் சட்டென்று செய்தியாளர்கள் பக்கம் திரும்பி அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தார். அப்போது, 'நீ செய்தி எப்டி போட்டாலும் பரவாயில்லை... என் பிள்ளை என்னை தேடி வந்துள்ளது' என்று கூறினார். பின்னர், வித, விதமான மது பாட்டில்களை குடித்து கொண்டே செய்தியாளர்களுக்கு அருள் பாலித்து கொண்டே பதில் கூறினார். அப்போது அவர், அசராமல் பேசுகையில், 'இந்த வருடம் பிறக்கும் போது சித்திரை ஒன்று, நாடு செழிக்கும்.. நல்ல மழை பெய்யும்... பூமி விளையும்.. மக்கள் செழிப்பாக இருக்க கருப்பசாமி உத்தரவு கொடுத்து விட்டார்... வருடம் பிறக்கும்போது நாட்டில் மழை பெய்யும்.. மக்கள் செழிப்பாக இருப்பர். எந்தவித குறை இல்லாமல் கருப்பசாமி காப்பாற்றி கொடுப்பார் சரிதானே' என்றுக் கூறினார்.