தமிழ்நாடு முழுவதும் இன்று டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்திலும் டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. டாஸ்மாக் மது கடைகளில் சமூக விலகலை கடைபிடித்து மது வாங்குவதற்கு வசதியாக, ஒரு அடி இடைவெளி விட்டு வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. மது வாங்க வருவோர் கட்டாயம் ஆதார் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியிருந்ததால், ஆதார் அடையாள அட்டையுடன் வந்த மது பிரியர்களுக்கு டோக்கன் அடிப்படையில் மது வழங்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லூரி நகரில் டாஸ்மாக் கடை எண் 10145 என்ற மது கடை செயல்பட்டு வருகிறது. இந்த மது கடை இன்று காலை 11 மணியாகியும் திறக்கப்படாததால் அங்கே மது வாங்க காத்திருந்த மதுபிரியர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள், டாஸ்மாக் விற்பனையாளர்களுடன் ரகளையில் ஈடுபட ஆரம்பித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்தக்கடையின் மேற்பார்வையாளர் சண்முகராஜா, விற்பனையாளர் சேகர் மற்றும் இருவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அலுவலர்கள், கடையில் மதுபாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுப்பெட்டிகளை கணக்கீடு செய்தனர். அப்போது, 50 மதுப்பெட்டிகள் மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாயமான மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு 12 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.