தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2021, 8:47 PM IST

ETV Bharat / state

இந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் 138 பேர் கைது- எஸ்.பி. ஜெயக்குமார்

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு, இதுவரை 138 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

எஸ்.பி ஜெயக்குமார்
எஸ்.பி ஜெயக்குமார்

தூத்துக்குடி: உலக புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றம் வருகிற 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று (செப்.28) நடைபெற்றது.

இதில் காவல் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை உள்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில்,

குலசை தசரா திருவிழா

"குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றம் வருகிற 6-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. 11 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழா 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடக்கிறது.

முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா

இதில் முக்கிய நாட்களான கொடியேற்றம் (6-ம் தேதி) மற்றும் சூரசம்ஹாரம் விழா நடைபெறும். 15-ஆம் தேதி ஆகிய இரு தினங்களிலும் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

இது தவிர தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி வெள்ளி, சனி, ஞாயிறு (8,9,10) ஆகிய தேதிகளிலும் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதர நாட்களில் பக்தர்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

தென்மாவட்டங்களில் தொடரும் குற்ற செயல்கள்

குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வாகன சோதனை மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஸ்ட்ராமிங் ஆபரேஷன் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள் 445 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

55 இடங்களில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 138 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக ஒரு ஆண்டுக்கு 125 பேர் மட்டுமே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை மட்டும் 138 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் சமூகவிரோத செயல்கள், பழிக்குப்பழியாக கொலை செய்தல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க:பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து மனு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details