தூத்துக்குடிமாவட்டம் கோவில்பட்டி கயத்தாறு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் சுரேஷ் (22). இவர் சமையல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (அக் 16) நள்ளிரவில் சுரேஷின் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் வீட்டு கதவை தட்டியுள்ளனர்.
அப்போது சுரேஷின் தாயார் ரேவதி கதவைத் திறந்தவுடன், ஆறு பேர் கொண்ட கும்பல் அவரது தாயாரை தள்ளிவிட்டு வீட்டுக்குள் புகுந்துள்ளது. பின்பு அங்கு படுத்திருந்த சுரேஷ்சை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுரேஷை மீட்டு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுரேஷ் உயிரிழந்தார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கயத்தாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திருநெல்வேலியை சேர்ந்த பந்தல்ராஜ் உள்ளிட்ட 6 நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.