தூத்துக்குடி: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிச.28) காலமானார். இந்த நிலையில் இன்று (டிச.29) மாலை அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது தேமுதிக தொண்டர்கள், திரையுலகினர்கள் மற்றும் பொதுமக்கள் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் சென்னை, அண்ணாசாலையீ உள்ள தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயகாந்த் மறைவு குறித்து அறிந்த நிலையில், விஜயகாந்த் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை செல்வதற்காக சீமான் தூத்துக்குடியில் உள்ள வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், "விஜயகாந்த் என்றாலே அச்சமின்மையும், துணிவும்தான். நான் பார்த்தவரை அவர் எதற்கும் பயப்படமாட்டார். எனக்கு நெருக்கமாக பழகும் வாய்ப்பு என்றால், அவர் நடித்த தவசி படத்தில் நான் தான் உரையாடல் எழுதினேன். அதனால், தவசி படத்தில் மூலம் அவருடன் பணியாற்றுவதற்கும், நெருக்கமாக பழகும் வாய்ப்பும் கிடைத்து. விஜயகாந்த் இடத்தை நடிப்பில் வேண்டும் என்றால் பூர்த்தி செய்ய ஒருவர் வரலாம். ஆனால் அவரைப்போல ஒரு சிறந்த மனிதர் வருவது கடினம்.
திரையுலகின் உச்சத்துக்கு சென்றபோதும், அதனை தலையில் ஏறாமல் பார்த்துக் கொண்டவர். திரையுலகில் இருந்து எல்லோருடனும் சமமாக பலகும் ஒருவர் என்றால் அது விஜயகாந்த் தான். அதனால் அவர் என்ன சொன்னாலும் அனைவரும் கேட்பார்கள். ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் கூட விஜயகாந்த் சொன்னால் கேட்பார்கள். எல்லாரும் அதிகளவில் அவர் மீது பாசம் வைத்திருந்தார்கள். அதற்கு காரணம் அவரும் அதே அன்போடு நேசித்ததுதான் காரணம். அப்படி ஒருவரை இழந்திருப்பது என்பது எப்படி பார்த்தாலும் மனதை தேற்றிக்கொள்ள முடியவில்லை.