தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 4, 2020, 5:29 PM IST

ETV Bharat / state

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு வழக்கு: கோவில்பட்டியில் சிபிஐ விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

CBI
CBI

தூத்துக்குடி சாத்தான்குளம் காவல் நிலைய காவல் துறையினரால் ஜூன் 19ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஜூன் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸூம், 23ஆம் தேதி அதிகாலை அனுமதிக்கப்பட்ட ஜெயராஜும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் வழக்குப்பதிவு செய்திருந்தார். தமிழ்நாடு முழுவதும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்திய இந்தப் பிரச்னையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இந்த வழக்கை டெல்லி சிபிஐ கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) விஜயகுமார் சுக்லா தலைமையிலான குழுவினர் விசாரித்துவருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு சிபிஐ அலுவலர்கள் இரண்டு பேர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு வந்தனர்.

அங்கு, ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி கிளைச் சிறை அலுவலர் சங்கர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், நீதித்துறை நடுவர் விசாரணை வேண்டி அளித்த ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றை சிபிஐ அலுவலர்கள் ஆய்வுசெய்தனர்.

மேலும், ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறாய்வின்போது பணியில் ஈடுபட்டிருந்த கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோரிடமும் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசனிடமும் சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

மாவட்ட மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை துணை இயக்குநர் பொன் இசக்கி, துணை இயக்குநரின் உதவியாளர் முத்துவிநாயகம், அரசு மருத்துவமனை செவிலி வனஜா ஆகியோரிடமும் சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details