தமிழ்நாடு

tamil nadu

’வங்கிகளில் தெர்மல் பரிசோதனை அவசியம்’ - வாடிக்கையாளர்களின் கோரிக்கை

By

Published : Aug 8, 2020, 7:50 PM IST

தெர்மல் ஸ்கேனிங் மூலம் விரைவாக ஒருவரின் உடல் வெப்பநிலைக் கண்டறிந்து மிக சிக்கலான நிலைக்கு முன்னர் அவர்களைப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்க முடியும். ஆனால் வங்கிகளில் இந்த நடவடிக்கை தாமதப்படுவது ஏமாற்றமளிப்பதாகத் தெரிவிக்கிறார், வாடிக்கையாளர் ஒருவர்.

வாடிக்கையாளர்களின் கோரிக்கை
வாடிக்கையாளர்களின் கோரிக்கை

வெகுஜன மக்களின் சேமிப்பு கேந்திரங்களாக உள்ளன வங்கிகள். நவீன யுகத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள், இயந்திரத்தில் பணம் எடுத்தல் போன்றவை பயன்பாட்டுக்கு வந்தாலும் வங்கிகள்தான் பெரும்பாலானோருக்கு பரிவர்த்தனைப் பெட்டகமாகச் செயல்பட்டுவருகின்றன.

விளிம்பு நிலை மக்கள் தொடங்கி கோடிகளில் வருமானம் ஈட்டுபவர் வரை தங்களது வருவாயின் ஒரு பகுதியை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதற்கு வங்கிகள் ஒரு மூலப் பாத்திரமாகச் செயல்படுகின்றன. வங்கிகள் நம் நாட்டின் பொருளாதாரச் சக்கரங்களின் அச்சாணி என்றே சொல்லலாம்.

ஒரு நாட்டின் வளர்ச்சியானது அந்நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பிலிருந்து மதிப்பிடப்படுகிறது. நமது நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பானது இந்திய ரிசர்வ் வங்கியால் கணக்கிடப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் இந்தியா முழுவதிலும் உள்ள தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகள் செயல்படுகின்றன.

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் மற்றும் உத்தரவுகள் இந்தியாவில் செயல்படும் மற்ற தனியார் வங்கிகளுக்கும், ஏனைய நிதி நிறுவனங்களுக்கும் பொருந்துவதாகும். அதன்படி அவ்வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்திற்கு உட்பட்டவையே. அந்த வகையில் உலகில் மிக அதிக வங்கிகள் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. அச்சுறுத்தலான காலகட்டத்திலும் அத்தியாவசிய தேவையைக் கருத்தில் கொண்டு வங்கிகள் செயல்படுவதற்கு மத்திய அரசு விதிவிலக்கு அளித்துள்ளது.

அதே வேளையில் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிர்ப்பதற்காக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கிப் பணியாளர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வங்கிகள் செயல்பட்டுவருகின்றன. ஆனாலும், சில இடங்களில் வங்கிப் பணியாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களும் கரோனாவைக் கடனாக வாங்கிச் செல்லும் அவலங்களும் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் வங்கிகளில் தடுப்பு நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படுகிறதா, வாடிக்கையாளர்களுக்கு எம்மாதிரியான முன்னெச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து ஈடிவி பாரத் சார்பில் கள ஆய்வு மேற்கொண்டோம்.

வங்கிகளில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வங்கி ஊழியர் தங்க மாரியப்பன் கூறுகையில், “வங்கிகளில் நடைபெறும் பணி பலரின் அத்தியாவசிய தேவைகளுக்கு காரணமாக இருக்கிறது. வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் நலனுக்கும், வங்கிப் பணியாளர்களின் பாதுகாப்புக்காகவும் சானிடைசர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறோம்.

கைகளைக் கழுவிய பின்னரே வங்கிக்குள் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக ஒரு நேரத்தில் ஐந்து வாடிக்கையாளர்களுக்கு மேல் வங்கிகளுக்குள் அனுமதி இல்லை. வாடிக்கையாளர்கள் காத்திருப்பதைத் தவிர்க்க டோக்கன் அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

வங்கி காசாளர் மற்றும் வாடிக்கையாளருக்கு இடையில் ஒரு அடி இடைவெளி பின்பற்றப்படுகிறது. வாரம் ஒருமுறை வங்கியில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கு அனைத்து வங்கிகளிலும் தெர்மல் ஸ்கேன் கருவிகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை அனைத்து வங்கிகளிலும் தெர்மல் ஸ்கேன் கருவிகள் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றாலும், அதை வாங்கி பயன்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.

தெர்மல் ஸ்கேனிங் மூலம் விரைவாக ஒருவரின் உடல் வெப்பநிலைக் கண்டறிந்து மிக சிக்கலான நிலைக்கு முன்னர் அவர்களைப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்க முடியும். ஆனால், வங்கிகளில் இந்த நடவடிக்கை தாமதப்படுவது ஏமாற்றமளிப்பதாகத் தெரிவிக்கிறார், வாடிக்கையாளர் ஒருவர்.

இது தொடர்பாக வாடிக்கையாளர் ரீகனிடம் கேட்கையில், “வங்கியில் வாடிக்கையாளர் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. குறிப்பாக வங்கிக்குச் செல்லும் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கைகளில் சானிடைசரால் சுத்தம் செய்தல் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், வாடிக்கையாளர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

கரோனா நெருக்கடியில் வங்கிகள்

என்னைப் போன்ற சாதாரண வியாபாரி ஒருவர் காலையில் வங்கிக்கு சென்றால் அந்த நாளில் பாதியை வங்கிப் பணிக்காக மட்டுமே செலவிட வேண்டியுள்ளது. வேறு எந்தப் பணியையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனவே இதனைக் களைய நடவடிக்கைகளை எடுத்தால் சிறப்பாக இருக்கும். வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய உரிய கருவிகளை வாங்கிவைக்க வேண்டும். மற்றபடி, வங்கிகள் வாடிக்கையாளர்கள் நலனுக்காக எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவையே” என்றார்.

இதையும் படிங்க:எச்சரிக்கை: வங்கி கணக்குகளை பின்தொடரும் ‘ஜோக்கர்’ மால்வேர்!

ABOUT THE AUTHOR

...view details