கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் திமுக சார்பில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "எந்த எதிர்ப்பு வந்தாலும் உதயசூரியன் உச்சிக்கு வரும்போது எல்லா பகையையும் எரித்துவிடும். உதயசூரியன் உதயமாகும்போது தமிழ்நாடில் உள்ள இருட்டு நீங்கி வெளிச்சம் வரும்.
ஜல்லிக்கட்டு போட்டியில் 8 மாடுகளை அடக்கிய வீரருக்கு தங்க காசு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் போலி தங்கத்தை கொடுத்து இழிவான செயலை அவர் செய்துள்ளார். இதேபோல் தான் போலியான ஆட்சியை அவர் நடத்தி வருகிறார்.
விளம்பரம் செய்ய கோடி கோடியாக பணம் உள்ளது. ஆனால் மக்களுக்கு உதவி செய்ய பணம் இல்லை. அரசு பணத்தை எடுத்து பத்திரிகையில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.
எல்லா விதத்திலும் தமிழ்நாடு வீழ்ச்சி பாதையில் செல்கிறது. தலைவர் ஸ்டாலினை அறிக்கை நாயகன் என்று கூறி வருகிறார்கள் அதிமுகவினர். ஆனால் முதலமைச்சர் அறிவிப்பு நாயகனாக வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியிடுகிறார்.