தமிழ்நாடு

tamil nadu

புரெவி புயல்: தயார் நிலையில் மீட்புக் குழு!

தூத்துக்குடி: புரெவி புயல் மீட்பு உதவிக்காக 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.

By

Published : Dec 3, 2020, 6:52 AM IST

Published : Dec 3, 2020, 6:52 AM IST

புயல் மீட்பு கட்டுபாட்டு அறையை ஆய்வு செய்த அமைச்சர்  கடம்பூர் ராஜு
புயல் மீட்பு கட்டுபாட்டு அறையை ஆய்வு செய்த அமைச்சர் கடம்பூர் ராஜு

இலங்கை திரிகோணமலை வடக்கே கரையைக் கடந்த புரெவி புயலானது தமிழ்நாட்டில் குமரி-பாம்பன் இடைப்பட்ட பகுதியில் இன்று கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக தென் தமிழ்நாடு மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்குப் புயல் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 21 கடலோர கிராம பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநில செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வுசெய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, "தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயலால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்கள் தங்குவதற்காக 96 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 3500 நாட்டுப் படகுகள் உள்ளிட்ட அனைத்துப் படகுகளும் கரைக்குத் திரும்பியுள்ளன.

புயல் எச்சரிக்கை சமயத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 72 படகுகளும் சாட்டிலைட் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு அனைத்து மீனவர்களும் கரை திரும்பியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதீத மழை காரணமாக குளங்களில் உடைப்பு ஏற்பட்டால் அதனை அடைப்பதற்காக 36 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் அவர்களை மீட்க 55 படகுகள் தயாராக உள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இரண்டு குழுக்களாகவும், மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் 130 பேர் ஐந்து குழுக்களாகவும் மீட்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளாக 36 இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றைக் கண்காணிப்பதற்காக வருவாய்த் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 21 கடலோர கிராமங்களும் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ள ஒவ்வொரு இடங்களிலும் மருத்துவக் குழுவும், 21 நடமாடும் மருத்துவக் குழுவும் மருத்துவச் சேவைக்காகத் தயார் நிலையில் உள்ளன" என்றார்.

இதையும் படிங்க: திரிகோணமலை வடக்கே கரையைக் கடந்தது புரெவி புயல்!

ABOUT THE AUTHOR

...view details