தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைத் திருமணம் எங்கு நடந்தாலும் வழக்கு - அமைச்சர் அதிரடி

குழந்தைத் திருமணம் எங்கு நடந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

By

Published : Jul 17, 2021, 6:42 PM IST

minister-geethajeven-press-meet-in-thuthookudi
minister-geethajeven-press-meet-in-thuthookudi

தூத்துக்குடி: தமிழ்நாடு சமூக நலன் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சார்ந்த பணிகள் குறித்த தென் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 17) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் அமைச்சர் பி. கீதாஜீவன் கலந்துகொண்டு சமூக நலன், மகளிர்-குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரதிகள், சுவரொட்டிகளை வெளியிட்டார்.

பின்னர், அவர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள், மகளிருக்கான திட்டங்கள், குழந்தைகளுக்கான திட்டங்களில் முக்கியத்துவம் செலுத்த வேண்டியது பற்றி எடுத்துரைத்தார்.

குழந்தைகளுக்கு நிதி உதவி

தமிழ்நாட்டில் திருமண உதவித் திட்டத்தில் நிலுவையில் இருந்த 20 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தற்போது அந்த 20 ஆயிரம் நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா நோய்த்தொற்றால் பெற்றோர் இரண்டு பேரை இழந்தவர்கள், பெற்றோர் ஒருவரை இழந்தவர் என சுமார் ஆயிரம் குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு நிதி உதவி

குழந்தைத் திருமணத்தை நடத்தினால் நடவடிக்கை

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கீதாஜீவன், ”குழந்தைத் திருமணம் நடத்தப்படுவதால் பெண்களுக்கு உடல் ரீதியாகப் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே குழந்தைத் திருமணம் நடத்தக் கூடாது என்பதைப் பற்றி பெற்றோர்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீறி குழந்தைத் திருமணத்தை நடத்தினால் காவல் துறை, சமூகநலத் துறை இணைந்து குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின்கீழ் கட்டாயம் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இது குறித்து பாதிக்கப்படும் குழந்தை, பெற்றோர் 1098 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்” எனக் கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், திருநங்கைகளுக்கான கரோனா நிவாரண நிதியுதவி, குழந்தைகள் பாதுகாப்புத் துறை சார்பில் கல்வி உதவித்தொகை, கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை 75 பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.

அமைச்சர் பி. கீதாஜீவன் செய்தியாளர் சந்திப்பு
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கே. செந்தில் ராஜ், சமூகநலத் துறை இயக்குநர் ரத்னா, சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் வளர்மதி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details