சாலைப் பாதுகாப்பு வார விழா ஜனவரி 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துக்களை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய முக்கிய பகுதிகளில் ஒவ்வொரு நாளும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பேரணிகள், கலைநிகழ்ச்சிகள், ஹெல்மட் பேரணி போன்றவை நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் நேற்று தலைக்கவசம் அணிவது, போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தல், மது அருந்தி வாகனம் ஓட்டுவதை தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தலைமையில் தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார்.