தூத்துக்குடி: பாஜக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 1) தூத்துக்குடி வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'புதிய பாராளுமன்ற திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. பாராளுமன்ற உறுப்பினர்கள், புதிய பாராளுமன்ற திறப்பு விழாவிற்கு வருகை புரிந்து அந்த விழாவில் கலந்து கொண்டது தங்களை தேர்ந்தெடுத்த பாராளுமன்றத்தினுடைய வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தக்கூடிய நாள். அத்தகைய நல்ல வாய்ப்பை எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து இருப்பது மிகுந்த வேதனைக்கும், வருத்தத்துக்கும் உரியது என்று தெரிவித்தார்.
தாங்கள் சார்ந்து இருக்கின்ற பாராளுமன்ற தொகுதி மக்களே வரும் நாட்களிலே அவர்களை புறக்கணிக்க கூடிய நிலை ஏற்படும் என்பதை அவர்கள் உணர வேண்டும் எனக் கூறிய அவர், புதிய பாராளுமன்றம் என்பது வளர்ந்த நாடுகளில் கட்டப்பட்டுள்ள பாராளுமன்றத்திற்கெல்லாம் சவால் விடும் வகையில், மிகச் சிறப்பான முறையிலே நம்முடைய வல்லுனர்களால் கட்டப்பட்டு இருக்கிறது என்றார். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாராளுமன்றம் ஒரு மைல் கல்லாகும் என்று புகழாரம் சூட்டினார். இந்தியாவினுடைய வளர்ச்சிக்கு, குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பல மயில் தூரத்தில் இருந்து தங்களுடைய தொகுதி மக்களுக்கு சேவையாற்ற அமைக்கப்பட்டு இருக்கின்ற பாராளுமன்றம் இந்த பாராளுமன்றம் என்று கூறினார்.
தொலைநோக்கு பார்வையோடு பிரதமர் மோடி (PM Modi), பாரதிய ஜனதா அரசு இதை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி என்றும் தமிழகத்திற்கு தனி சிறப்பு வரலாற்று சிறப்புமிக்க செங்கோல் ஆகும் என்று பெருமிதம் கூறினார். பாராளுமன்றத்திலே வைக்கப்பட்டிருக்கின்ற இத்தகைய செங்கோல், நேர்மையாக அதேபோல, நெறி பிறழாமல் செயல்படுவதற்கு ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் அதை பார்க்கும் போது, எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று தெரிவித்தார். இப்படி வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை பற்றி அரசியல் காரணங்களுக்காக பல தகவல்கள் திரித்து, தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் கொடுத்துக் கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியதோடு அவை மக்களால் நிராகரிக்கப்படும் என்றார்.