தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் 3 மாதங்களுக்குப் பிறகு மீன்பிடிப்புப் பணிகள் தொடக்கம் - தமிழ்நாட்டில் மீன்பிடி தொழில்

தூத்துக்குடி: மூன்று மாதங்களுக்குப் பிறகு விசைப்படகு மீனவர்கள், இன்று (ஜூன் 1) முதல் சுழற்சி முறையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் பிரின்சி வயலா, படகு போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார்.

fishing in tn
thoothukudi fisherman

By

Published : Jun 1, 2020, 1:28 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக எழுந்த கோரிக்கையையடுத்து, கிழக்கு கடற்கரைப் பகுதியில் 61 நாள் விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடைக்காலத்தை, 47 நாட்களாக மத்திய அரசு குறைத்தது. இதன் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 240 பதிவுசெய்யப்பட்ட விசைப்படகுகளில் 120 விசைப்படகுகள் கடலுக்குச் சென்றன. இன்று செல்லும் விசைப்படகுகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும், எஞ்சியுள்ள விசைப்படகுகள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களும் என சுழற்சி முறையில் செல்ல வேண்டும் என மீன்வளத்துறை சார்பில் நடைபெற்றக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல டோக்கன் பெற்றுக்கொண்ட மீனவர்கள் மட்டும், மீன்பிடித் துறைமுகத்துக்குள் அனுமதி பெற்று நுழைந்தனர். அவர்களுக்கு சானிடைசர் அளிக்கப்பட்டு, உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட்டது.

இன்று மாலை நடைபெறும் மீன் ஏலத்திலும் வியாபாரிகள், மீனவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது,

இதுகுறித்து ஆழ்கடல் மீன்பிடித்தலுக்குச் செல்லும் மீனவர் சேவியர் கூறியதாவது, 'தூத்துக்குடியில் 3 மாதங்களுக்குப் பிறகு மீன்பிடிப்புத் தொழிலுக்கு அனுமதி வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கடலில் மீன்கள் கிடைப்பதைப் பொறுத்து எங்களுக்கு வருமானம் இருக்கும். ஆகவே, இன்று கடலுக்குச் செல்லும் படகுகள் திரும்பி வருகையில்தான் எங்கள் வருமானம் தீர்மானிக்கப்படும்.

தமிழ்நாடு அரசு மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுத்ததோடு தனது பணியை நிறுத்திக் கொண்டது. மீனவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. எங்களுக்கு அதன்பிறகு எவ்வித உதவியும் செய்யவில்லை.

இன்று கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் தகுந்த பாதுகாப்புடன் சென்றுள்ளனர். மீன்பிடித் துறைமுகத்துக்கு வரும் மீனவர்கள், வியாபாரிகளுக்கு உடல் வெப்பநிலை கண்காணிக்கப்படுகிறது.

மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு படகுக்கு 21 பேர் சென்று வந்த நிலையில், தற்போது 12 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விதிமுறைப்படி நாங்கள் தொழிலுக்கு செல்கிறோம்' எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details