தமிழ்நாடு

tamil nadu

குலசை தசரா திருவிழா கோலாகலம்.. காளி உள்ளிட்ட வேடமணிந்து பக்தர்கள் வேண்டுதல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 10:17 AM IST

Updated : Oct 23, 2023, 10:27 AM IST

Kulasai Mutharamman temple : கேட்ட வரம் அளிக்கும் குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்கள் அணிந்து தர்மம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அது குறித்த ஓர் சிறப்பு தொகுப்பைக் காணலாம்.

Kulasai Mutharamman temple
கேட்ட வரம் அளிக்கும் குலசை முத்தாரம்மன்; பக்தர்கள் விரதத்தினால் நன்மைகள் நடந்துள்ளனவா

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா

தூத்துக்குடி: இந்தியாவில் கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென் மாவட்டத்தை பொறுத்தவரை நவராத்திரி என்றாலே, குலசேகரன்பட்டினம் தான். இதனை சுருக்கி 'குலசை' எனவும் அழைக்கின்றனர்.

இங்கு தூத்துக்குடியில் இருந்து மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களில் உள்ள மக்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி 10 நாட்கள் விரதம் இருந்தும், வேடமணிந்தும் தசரா திருவிழாவில் குடும்பம், குடும்பமாக கலந்து கொள்வார்கள். இத்திருக்கோயிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பிகை முத்தாரம்மனும் வீற்றிருக்கிறார்கள்.

அதாவது, பாண்டியநாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால், இவ்வூர் குலசேகரன்பட்டினம் என அழைக்கப்படுவதாக வரலாறு உண்டு. முன்னொரு காலத்தில் இந்த முத்தாரம்மன் கோயிலானது சாதாரண ஒரு தெருக்கோயிலாக இருந்து வந்தது.

ஆனால் இன்று பிரசித்தி பெற்ற திருக்கோயிலாக சிறப்பு பெற்று வளர்ச்சி பெற காரணம் அம்பாளின் மீதுள்ள பக்தர்களின் அளவு கடந்த நம்பிக்கைதான் எனக் கூறப்படுகிறது. முன்னர், அம்மை நோய் குணமாக வேண்டி மட்டுமே அம்மனுக்கு விரதம் மேற்கொள்வர்கள். ஆனால் இப்போது கடன், வியாபார முடக்கம், வழக்கு பிரச்சினை என சகல துன்பங்களையும் நீக்கி வரமருள்வதால் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனின் அருளைப் பெற பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்காண்டு லட்ச கணக்கில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இக்கோயில் கிராமத்து கோயிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் அருள் பெரும் சக்தி தலமாகவே விளங்குகிறது. ஆண்டு தோறும் நவராத்திரி நாளில் தொடங்கும் இத்திருவிழா, 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவில் குலசேகரன்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் களைகட்டும்.

இந்த ஆண்டும் அதேபோல் திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்களும் பல்வேறு வேடங்கள் அணிந்து தர்மம் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடியை அடுத்த ஸ்பீக் நகர் பகுதியில் குடிசை அமைத்து (காளி பறை) கிட்டத்தட்ட 27 வருடங்களாக தவறாமல் முத்தாரம்மனுக்கு மாலையிட்டு செல்லும் ஒரு குழுவினரை ஈ.டிவி பாரத் தமிழ்நாடு சந்தித்தது.

காளி பறை என்று சொல்லக்கூடிய குடிசை செட்டில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் வேடம் கட்ட ஆயத்த நிலையில் இருந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை (ஆண், பெண்) அவரவர்கள் வேண்டுதலுக்கேற்ப வேடம் அணிய தயாராகி கொண்டிருந்தனர். பின்னர், 30 நிமிடங்களுக்கு மேலாக வேடம் அணிந்தனர், அந்த அளவிற்கு நுணுக்கமாக வேடங்கள் அணிந்தனர்.

அதாவது குறவன், குறத்தி, அம்மன், ராஜா, ராணி, விநாயகர், காளி, சிவன், கிழவி, பிச்சைக்காரன், பெண் வேடம், கிருஷ்ணர், பேச்சியம்மன், முருகன், அம்மன், சுடுகாட்டு காளி, அட்டை காளி என பல்வேறு வேடங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணிந்து தத்ரூபமாக காட்சியளித்தனர்.

பின்னர், மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு பூஜை செய்து விட்டு அங்கிருந்து வீடு, வீடாக சென்று தர்மம் எடுக்க ஆயத்தமானார்கள். அப்போது அவர்களுக்கு மக்கள் மனமகிழ்ச்சியுடன் பணம் காணிக்கையாக வழங்குவதை கண் கூடாக பார்க்க முடிந்தது. அதாவது, முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம் உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அம்மனே நேரில் வந்து கேட்பதாக கருதி மக்கள் தர்மம் செய்கிறார்கள். மேலும், இக்குழுவில் 24 ஆண்டுகளாக தொடர்ந்து விரதமிருந்து காளி வேடம் அணியும் பக்தரான சுடலை மணியிடம் கேட்டபோது, "ஒவ்வொரு பக்தர்களும் ஒவ்வொரு வேண்டுதல்களோடு முத்தாரம்மனுக்கு மாலையிட்டு குழுவாக விரதம் இருந்து கோயிலுக்கு செல்வோம்.

எங்கள் குழுவின் தலைவர் அருணாச்சல பாண்டியன், செயலாளர் திருப்பதி, பொருளாளர் அரி கிரிஷ்ணன் ஆகியோர் தலைமையில் 27 வருடங்களாக சிறப்பாக நடந்து வருகிறது. இக்குழு 21 நாட்கள் காளி பறை அமைத்து உணவாக ஒரு நேர விரத சாப்பாடு, அதாவது, பச்சரிசி துவையல் மட்டுமே உண்டு வருகிறோம்.

நான் 25 வருடகாலமாக மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறேன். தொழில் வளம், கஷ்டம் நீங்க வேண்டுதலுக்கேற்றவாறும், வசதிக்கு ஏற்பவும் வேடம் அணிந்து வருகிறேன். மருத்துவமனைக்கு சென்று குணமாகாத நோய்கள் எல்லாம் அம்மனுக்கு மாலையிட்டு சென்றால் நோய் நொடி நீங்கி சுகமாக உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குலசேகரன்பட்டினத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆனால் தற்போது நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குலசை தசரா மைசூருக்கு அடுத்தபடியாக என்கிறார்கள். ஆனால் இனி குலசைக்கு அப்புறம் தான் மைசூர் தசரா விழா, அந்த அளவுக்கு அம்மன் அருள் அளிக்கிறார்.

முன்னரெல்லாம் உடல்நலம், திருமண தடை போன்ற பிரச்சினைகள் தீர வீட்டில் ஒருவர் மாலையிடுவர். ஆனால் தற்போது அம்மன் அருள் கிட்டுவதால் குடும்பத்தில் அனைவரும் மாலையிடுகின்றனர். கோயிலில் நிற்பதற்கு கூட இடம் இல்லாத நிலை தான். அந்த அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது" என்றார்.

பக்தி பரவசத்தில் மனமுறுகி வேண்டிக்கொண்டு தசாரா திருவிழாவில் மாலை போட்டு வேடமணிந்து முத்தாரம்மனை தரிசித்தால் அடுத்த ஆண்டு தசராவுக்குள் பலன் கிடைக்கும் என்று அடித்து கூறுகிறார்கள் அங்குள்ள பக்தர்கள். மேலும், இன்று 12 மணிக்கு முக்கிய நிகழ்வான குலசேகரன்பட்டினம் கடற்கரையில் சூரசம்காரம் நிகழ்வு நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயில் நவராத்திரி விழா: பெரியநாயகி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்!

Last Updated : Oct 23, 2023, 10:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details