தமிழ்நாடு

tamil nadu

“திருச்செந்தூர் கோயிலில் எந்தவொரு கட்டணமும் உயர்த்தப்படவில்லை” - கனிமொழி எம்பி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 10:07 AM IST

MP Kanimozhi: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எந்த ஒரு கட்டணமும் உயர்த்தப்பட்டவில்லை எனவும், 2018-இல் உள்ள கட்டணம்தான் நடைமுறையில் உள்ளது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கனிமொழி எம்.பி. ஆய்வு
கனிமொழி எம்.பி.

கனிமொழி எம்.பி பேட்டி

தூத்துக்குடி: திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வரும் நிலையில், பக்தர்களுக்கு செய்யப்பட்ட அடிப்படை வசதிகள், முன்னேற்பாடுகள் குறித்து நேற்று (நவ.16) கனிமொழி எம்.பி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கி, வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பக்தர்கள் தங்குவதற்கான தற்காலிக கூடம், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள், அன்னதானக் கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உள்பட பலர் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கனிமொழி எம்.பி பேசியதாவது, “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்த சஷ்டி திருவிழா, பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நடைபெறக்கூடிய மிகப்பெரிய விழாவாகும். இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் பக்தர்கள் இந்த கந்த சஷ்டி திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவரை கிட்டத்தட்ட மூன்று லட்சம் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து சென்றுள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் அன்னதானக் கூடத்தில் அமர்ந்து உணவு அருந்தியுள்ளனர்.

இவ்விழாவில் 22 தற்காலிக பந்தல்கள் பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிகள் ஆண்களுக்காக 225, பெண்களுக்காக 240, இருபாலருக்கும் 28 குளியல் தொட்டிகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கென்று 200 இடங்களில் குடிநீர் வசதிகள், ஒரு நாளைக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், 13 இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும், “ஆய்வில் பக்தர்களைச் சந்தித்து பேசுகையில், அனைத்து வசதிகளும் மிகச் சிறப்பாக செய்யபட்டிருப்பதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஆனால், கோயிலில் பிரச்னையை எழுப்புவதற்காக, இன்னும் சிலர் கோயிலில் பணம் வாங்கிக்கொண்டு தான் தரிசனத்திற்கு அனுப்பி வருகிறார்கள் என்ற கருத்துகளை தவறாக பரப்பி வருகின்றனர்.

தொடர்ந்து, தர்ம தரிசனம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழாவிற்கென்று மூத்த குடிமக்களுக்கு, தனிவரிசை மூலம் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு என்றும் தனிவரிசை போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரூ. 200 ஆக இருந்த திருவிழா அபிஷேக கட்டணச் சீட்டு 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாகவும், ரூ.500 ஆக இருந்த விஸ்வரூப தரிசனம் ரூ. 2 ஆயிரம் உயர்த்தபட்டிருப்பதாகவும், ரூ.500 ஆக இருந்த கந்த சஷ்டி திருவிழா அபிஷகச் சீட்டு ரூ. 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆனால், இதவரை 2018-இல் உயர்த்தப்பட்ட தரிசன கட்டணம்தான் தொடா்கிறது. தற்போது வரை யாரும் கட்டணத்தை உயர்த்தவில்லை. திருச்செந்தூரில் பெருந்திட்ட வளாகப் பணிகள் முடிவடைந்த பிறகு பக்தர்கள் சுலபமாக தரிசனம் செய்வதற்கு வழிவகைகள் செய்யப்படும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கு கரோனா பணிச்சான்று வழங்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details