தூத்துக்குடியில் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பேசினார். அதில் அவர் கூறியதாவது, “பொள்ளாச்சியில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்களைத் தமிழக அரசு மூடி மறைக்கப் பார்க்கிறது. இது மக்களுக்குப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றம் பாலியல் தொடர்பான வழக்குகளில் தெளிவான ஒரு கருத்தைக் கூறி இருக்கிறது. அதாவது, பாலியல் தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையோ அல்லது அவரை அடையாளம் காட்டும்படியான விவரங்களை வெளியிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் அதையும் மீறி பொள்ளாச்சியில் பாலியல் வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்களை எடப்பாடி அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இது, பாலியல் வன்முறை வழக்கில் இனி ஒருவரும் முன்வந்து புகார் அளிக்கக்கூடாது என்று அவர்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளது. அது போல கடந்த 7 ஆண்டுகளாக இந்த கொடுமை நடந்து வருகிறது என்ற தகவல் வெளிவந்திருக்கும் நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளனர். எனவே இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.