தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சந்திராயன்-2 செப்டம்பர் 7ல் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும்! - மூக்கையா

தூத்துக்குடி: சந்திராயன்-2 செயற்கைக்கோள் செப்டம்பர் 7ஆம்தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய திட்ட இயக்குநர் மூக்கையா தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ இயக்குநர் மூக்கையா

By

Published : Jul 23, 2019, 7:22 PM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ சமீபத்தில் சந்திராயன்-2 செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இந்த திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய திட்ட இயக்குநர் மூக்கையா தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சந்திராயன்-2 செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் 6 ஆயிரம் கிலோமீட்டர் அதிகமான தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

சந்திராயன்-2 செயற்கைக்கோளை விண்ணில் முன்கூட்டியே ஏவ திட்டமிட்டிருந்தோம். கடைசி கட்டத்தில் விண்கலத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது தள்ளிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோளாறு சரிசெய்யப்பட்டு சந்திராயன்-2 செயற்கைக்கோள் மீண்டும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

சந்திராயன்-2 செயற்கைக் கோளானது மூன்று நிலைகளில் தனது ஆய்வினை மேற்கொள்ளும். முதல் நிலையான ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் எனும் நிலை தனியே பிரிந்து, நிலவின் தென்துருவத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 2.43 மணிக்கு தரையிறங்கும். அதனைத் தொடர்ந்து ரோவர் தனியே பிரிந்து நிலவில் 500 மீட்டர் பரப்பளவில் ஆய்வினை மேற்கொள்ளும். லேண்டர் பகுதி நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியதும் பெங்களூருவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்கு சமிக்ஞை அனுப்பும். அதனைத் தொடர்ந்து நிலவின் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இஸ்ரோ இயக்குநர் மூக்கையா
மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான எரிபொருள் தயாரிப்பு பணி நடைபெறுகிறது. வருங்கால திட்டங்களுக்கும் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மார்க்-3 உள்ளிட்ட மூன்று என்ஜின்களைக் கொண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும். அடுத்தக் கட்டமாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ளும் திட்டமான "ககன்யா" திட்டத்தை மேற்கொள்ளும் பணியில் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஈடுபட உள்ளது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details