தமிழ்நாடு

tamil nadu

Exclusive:திருச்செந்தூர் நெரிசல்- நீதிமன்ற உத்தரவால் முருக பக்தர்களுக்கு நிம்மதியா?

By

Published : Apr 12, 2022, 7:20 PM IST

Updated : Apr 13, 2022, 8:17 PM IST

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்வதில் உள்ள பிரச்சனைகள் குறித்து தான் தொடர் கட்டுரைகளாகப் பார்த்து வருகிறோம். அதன் இரண்டாம் பகுதி இது...

திருச்செந்தூர் முருகன்
Murugan Temple

திருச்செந்தூர்: இறைவனுக்கு முன் அனைவரும் சமம், விஐபி தரிசனம் ரத்து என்ற உத்தரவை பத்திரிகைகள் சிலாகித்து எழுதின. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த உத்தரவு தான் மறுநாள் அனைத்து ஏடுகளிலும் பக்கங்களை அலங்கரித்தது.

ஆனால், இந்த உத்தரவு நடைமுறையில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றோம். ஆனால், அங்கு பார்த்த காட்சிகள் திகிலை ஏற்படுத்தின.
நதியாய் நீளும் வரிசைகள்:சந்நிதி தெரு தாண்டி, தூண்டுகை விநாயகர் கோயிலை தாண்டும் போதே கூட்ட நெரிசலின் காட்சிகள் கண்ணில் படத் தொடங்கின. கோயிலின் பிரதான நுழைவுவாயிலான சண்முக விலாசம் அருகே இருந்த கட்டண கவுன்டர் அன்னதான மண்டபம் இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

100 ரூபாய் தரிசனத்திற்கான டிக்கெட் அங்கேயே தொடங்கியது. அங்கிருந்து வரிசைகீழ் நோக்கி இறங்கி பல சுற்றுக்களை கடந்து, கோயிலினுள் நுழைகிறது. ரூ.100 கட்டண வரிசையின் நிலை இப்படியென்றால் தர்ம தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்தின் வரிசை கோயிலின் வெளிபிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி , கலையரங்கிற்குப் பின்னால் இருக்கும் டோல்கேட் வரை செல்கிறது.
அறவே இல்லாத அடிப்படை வசதிகள்:தர்ம தரிசன வரிசையில் பக்தர் ஒருவர் காலை 6 மணிக்கு நிற்கத் துவங்கினால், சாதாரண நாள்களில் 2 முதல் 3 மணி நேரமும், விசேஷ நாள்களில் 4 முதல் 6 மணி நேரமும், அல்லது அதனையும் தாண்டி நின்றால் தான் தரிசனம் முடித்து வெளியே வர முடியும்.

இந்த காத்திருப்பு நேரத்தில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. பச்சிளம் குழந்தைகளுடன் கோயிலுக்கு வருவோர், பாதி வரிசையில் குழந்தை அழுதால் கோயிலுக்குள் தரிசனத்திற்காக தொடர்ந்து செல்லவும் முடியாது, போதுமென்று வெளியேற வேண்டுமானாலும், இதுவரை கடந்து வந்த நெரிசல் மிகுந்த வரிசையை திரும்பி கடக்க வேண்டும்.

5 முதல் 6 மணி நேர வரிசையில் குழந்தைகளோ, முதியவர்களோ நோயாளிகளோ இயற்கை உபாதைகளை அடக்கிக் கொள்ளத் தான் வேண்டும். வண்டியில் ஏற்றப்படும் அடிமாடுகள் போல அத்தனை நெரிசல்களையும் சங்கடங்களையும் தாண்டித் தான் சந்நிதிக்கு செல்கின்றனர்.
மறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்:சாதாரணமானவர்களுக்கே இந்த நிலைமை என்றால் மாற்றுத்திறனாளிகளின் நிலையை கூறவே வேண்டாம். தரிசனம் செய்வதை விடவும், திருச்செந்தூர் மண்ணை மிதித்தால் போதுமென, வெளி பிரகாரத்தை சுற்றிக் கும்பிட்டுவிட்டு, முருகனை நினைத்தவாறே ஊருக்கு புறப்படுபவர்களை எளிதாக காணலாம்.

திருப்பதியுடன் ஒப்பிட முடியுமா?:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனால் கூட, காத்திருக்கும் கூண்டுகளில் பக்தர்களுக்கு உணவு, பால், தண்ணீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் தாராளமாக கிடைக்கும் கடைசி ஒரு மணி நேரமோ அல்லது 2 மணி நேரமோ மட்டும் தான் இடைவெளியின்றி வரிசையில் நிற்க வேண்டும்.

திருச்செந்தூர் நெரிசல்- நீதிமன்ற உத்தரவால் முருக பக்தர்களுக்கு நிம்மதியா?

ஆனால், திருச்செந்தூரில் எத்தனை மணி நேரம் காத்திருந்தாலும் சண்முக விலாசத்தை தாண்டிய மண்டபத்தில் இருக்கும் தண்ணீரைத் தவிர, வேறு எந்த வசதியும் இல்லை. திருச்செந்தூர் கோயிலில் உரிமையுடன் வலம் வரும் திரிசுதந்திர பிராமணர்கள் யார்? அவர்களில் ஒருவரே நீதிமன்றம் செல்லும் அளவுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது? நிம்மதியான தரிசனத்திற்கு நிரந்தர தீர்வு தருமா அறநிலையத்துறை? அடுத்த பகுதியில் நாளை பார்க்கலாம்.

- தொடரும்...

இதையும் படிங்க : Exclusive: திருச்செந்தூர் முருகன் தரிசனம் - நிரந்தரத் தீர்வு கிடைக்குமா?

Last Updated : Apr 13, 2022, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details