கடந்தாண்டு ஜூன் மாதம் பிரதமர் மாலத்தீவிற்கு அரசுமுறைப் பயணமாக சென்றபோது, இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சருடன் காணொலி காட்சி மூலம் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கையினை உறுதிபடுத்தும் வகையில், மத்திய கப்பல் துறை இணையமைச்சர், ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் மன்சுக் மண்டவியா மற்றும் மாலத்தீவு நாட்டின் போக்குவரத்து மற்றும் பயணிகள் விமானப்போக்குவரத்து அமைச்சர் ஆயிஷத் நஹீலா ஆகியோர் இணைந்து தூத்துக்குடியிலிருந்து கொச்சின் வழியாக மாலத்தீவு குல்ஹதுபுஷி மற்றும் மாலே துறைமுகங்கள் வரையிலான சரக்கு போக்குவரத்து சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தனர்.
இக்கப்பல் சேவையை இந்திய கப்பல் கழகம் மாதத்திற்கு மூன்று முறை இயக்கும். இச்சேவையின் மூலம் குறைந்த செலவில் சரக்குகளை நேரடியாக இந்தியாவிலிருந்து மாலத்தீவிற்கு எடுத்துச் செல்லமுடியும்.