தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குமராபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 12 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். பள்ளிக் கட்டடம் மிகவும் பழுதாகி இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் வைத்து பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் ராஜா என்பவர் தலைமையாசிரியராகவும், பாக்கிய செல்வி என்பவர் இடைநிலை ஆசிரியராகவும் பணியாற்றிவருகின்றனர்.
குடியரசு தினமான நேற்று விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபு, சிவபாலன், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி உள்பட பலர் எஸ். குமராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் புதியகட்டடம் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு காலை 11.30 மணியளவில் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, பள்ளியின் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி இல்லாமல் இருந்ததைப் பார்த்த எம்எல்ஏ சின்னப்பன், அப்பகுதி மக்களிடம் விசாரித்துள்ளார். அப்போது, பள்ளியில் தேசியக்கொடி பறக்கவைத்து குடியரசு தின விழா கொண்டாடப்படவில்லை என்பதும், தலைமை ஆசிரியரோ, இடைநிலை ஆசிரியரோ பள்ளிக்கு வரவில்லை எனவும் தெரியவந்தது.