தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே உள்ள இனாம்மணியாச்சியில் அதிமுக சார்பில் அண்ணாவின் 115 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார்.
அப்பொது அவர் பேசுகையில், "அண்ணா தொடங்கிய கட்சியாக திமுக இருந்தாலும் தற்பொழுது குடும்ப கட்சியாக மாறிவிட்டது. அண்ணாவின் பெயரை, புகழை மறைத்தவர்கள் திமுகவினர். ஆனால் அதிமுகவினர் ஏமாற்றமாட்டார்கள், ஏமாற்றுவதற்கு பிறந்தவர்கள் திமுகவினர். மாற்றம் தருவதாக கூறி ஏமாற்றத்தினை கொடுத்துள்ளனர். இதனால் மக்கள் கொந்தளித்து போய் உள்ளனர்.
ஆளுகின்ற பொறுப்பில் இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணியாற்றும் இயக்கம் அதிமுக. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து அதிமுக வலியுறுத்திய காரணத்தினால் தான், இன்றைக்கு தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை என்று தெரிவித்துள்ளனர். குடும்பத் தலைவிக்கு ரூ.1000 உரிமைத்தொகை கொடுப்பது வரவேற்க கூடியது தான்.
ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிக்கு ரூ.1,500 வழங்கப்படும் என்றும் அறிவித்து இருந்தோம், இருந்த போதிலும் மக்கள் ஏமாந்து போய் திமுகவிற்கு வாக்களித்து விட்டனர். தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை. 1 கோடியே 6 லட்சம் பேருக்கு கொடுத்து விட்டு, 1 கோடியே 48 லட்சம் பேருக்கு பட்டை நாமம் போட்ட திட்டம் இந்த உரிமைத்தொகை திட்டம்.