தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 25, 2021, 10:12 AM IST

ETV Bharat / state

சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள்: மீட்க வலியுறுத்தி மீன்வளத் துறை அமைச்சரிடம் மனு

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து மனு அளித்துள்ளனர். மேலும் மத்திய அமைச்சரைச் சந்திக்கவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

Rameshwaram fisher man issue:மீனவர்கள் மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்
Rameshwaram fisher man issue:மீனவர்கள் மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்

தூத்துக்குடி:கடந்த சில நாள்களுக்கு முன்பாக ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காகச் சென்ற ராமேஸ்வரம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 62 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர்.

மீனவர்களின் படகுகளும் பறிமுதல்செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்டது. தமிழ்நாடு மீனவர்கள் 62 பேர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்ட நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி, ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் ராமேஸ்வரம் மீனவர்கள், மாநில மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

தொடரும் இலங்கைக் கடற்படையின் அட்டூழியம்

இதையடுத்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கச் செயலாளர் ஜேசுராஜா செய்தியாளரிடம் கூறுகையில், ”கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களைக் கைதுசெய்து அவர்களது படகுகளை பறிமுதல் செய்யும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. இந்திய மீனவர் 62 பேர் இலங்கையில் சிறைவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுவருகின்றனர்.

எனவே மீனவர்களை மீட்கும் பொருட்டு மீன்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து மனு அளித்துள்ளோம். மீனவர்களின் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மீன்வளத் துறை அமைச்சர், அலுவலர்களுடன் மத்திய அமைச்சரைச் சந்திக்க நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்‌.

மீன்பிடி எல்லை என வரையறுக்கப்பட்டுள்ள பகுதி மிகக் குறுகிய கடல் நாட்டிக்கல் மைல் தொலைவுக்குள்ளாகவே இருப்பதால் இதுபோன்று மீனவர்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்கதையாக நடந்துவருகின்றன. எனவே இரு நாட்டு மீனவர்களும் பாரம்பரியமான பகுதியில் தொடர்ந்து மீன்பிடித் தொழில் செய்ய சுமுகத் தீர்வு எட்டித்தர வேண்டும்” என்றார்.

மத்திய அமைச்சரைச் சந்திக்க நடவடிக்கை

இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், ”தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து மீனவர்களை மீட்கக் கோரிக்கை வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுடன் ராமேஸ்வரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர், மீன்வளத் துறையின் சார்பிலும் அலுவலர்கள் டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்‌. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீது தொடரும் இந்தத் தாக்குதலை நிறுத்துவதற்கு நிரந்தரத் தீர்வு எட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க:Night Curfew: தமிழ்நாட்டிற்கு இரவு நேர ஊரடங்கு அவசியமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும் புதுத்தகவல்

ABOUT THE AUTHOR

...view details