தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளை மிரட்டிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு! - காவல் துறையினர் மீது புகார் அளித்த விவசாயிகள்

தூத்துக்குடி: எரிவாயு குழாய் பதிப்பது குறித்து புகார் அளிக்கச் சென்ற விவசாயிகளை மிரட்டிய காவல் துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

Police threat farmers in thoothukudi

By

Published : Jul 14, 2020, 12:52 AM IST

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசல், பொட்டல்காடு பகுதியை உள்ளடக்கிய சுற்றுவட்டார கிராம பகுதிகளில், இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாய விளை நிலங்களின் வழியே நடைபெறும் இந்த பணிக்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி வாழைத்தோட்டம் வழியே அனுமதியின்றி எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட எண்ணெய் நிறுவனத்தினர் குறித்து புகார் அளித்தனர். ஆனால், விவசாயிகளை காவல் துறையினர் மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து புகார் அளிப்பதற்கு குலையன்கரிசல் சேர்ந்த விவசாயிகள் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றிருந்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து விவசாயி ஒருவர் பேசுகையில், "குலையன்கரிசல் சுற்றுவட்டாரப் பகுதியில் ஜூலை 10ஆம் தேதியன்று இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் அனுமதியின்றி வாழை பயிர் தோட்டத்தின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற பொழுது எங்களை கைதிபோல அமர வைத்து காவல் துறையினர் மிரட்டினர்.

காவல் துறையினரின் இந்த நடத்தை கண்டிக்கத்தக்கது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விளக்கினோம். ஆனால் அவரும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து எங்களை மிரட்டினார்.

காவல் துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டுவிட்டு, ஏவல் துறையாக செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏற்கனவே எரிவாயு குழாய் பதிக்கும் பணி தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கும்போது மீண்டும் அது மாதிரியான போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details