கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், மண்டல வாரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊரடங்குத் தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வருகின்ற 7ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. மதுக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கவும், மது வாங்க வருவோர் குறைந்தபட்சம் 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்பன உள்பட சில நிபந்தனைகளையும் அரசு விதித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதனால் நோய்த்தொற்று, மேலும் அதிகரிக்கும் அபாயம் உருவாகலாம் என மனநல மருத்துவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த மனநல மருத்துவர் சிவசைலம் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "கரோனா வைரஸ் பரவல் காரணமாக 40 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தி, மது போதைக்கு அடிமையானவர்கள், அதிலிருந்து விடுவித்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பார்கள்.
மதுவை விட்டவர் மீண்டும் அருந்தினால் உயிருக்கு ஆபத்து:
இதற்காக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைகளையும் பின்பற்றியிருக்கலாம். தற்போது, தமிழ்நாடு அரசு 7ஆம் தேதி முதல் மதுக் கடைகளைத் திறப்பதால் விளைவுகள் விபரீதமாகக் கூடிய அபாயம் உள்ளது. மதுப் பழக்கத்திலிருந்து மீள்வதற்காக, மாத்திரை, மருந்துகளை உட்கொண்டு வருபவர், மீண்டும் மதுவை அருந்தினால் அவர்களுக்கு கல்லீரல், கணையம் பாதிப்பு ஏற்படலாம். மாத்திரை மூலக்கூறுகளுடன் எதிர்வினையாற்றி மூளைக்குச் செல்லும் நரம்புகள் கூட வெடித்து சிதறி உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.