தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 50). டி.வி.மெக்கானிக்காக வேலைசெய்து வரும் இவர் தூத்துக்குடி மாவட்ட திமுக கலை இலக்கிய அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். இவர், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி அவருடன் வல்லுறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதன் விளைவாக அந்த சிறுமி கர்ப்பம் தரித்தார். கர்ப்பம் அடைந்ததுகூட தெரியாமல் அந்த சிறுமி தொடர்ந்து பள்ளி சென்றுவந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக சிறுமியை அவளது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது குழந்தையின் எதிர்காலம் இப்படி சீரழிந்துவிட்டதே என நினைத்து கதறி அழுதனர்.
இதைத் தொடர்ந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த அவளது பெற்றோர்கள், கர்ப்பம் கலைவதற்கு மருந்து கொடுத்ததில் சிறுமிக்கு, 6 மாத சிசு இறந்த நிலையில் பிறந்துள்ளது. இறந்த நிலையில் பிறந்த குழந்தையை வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டப் பகுதியில் சிறுமியின் வீட்டார் குழி தோண்டி புதைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து காவல் துறையினர் சிறுமியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிறுமியை திமுக பிரமுகர் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கியதும், திமுக பிரமுகர் ராஜ் ”இதை வெளியே யாரிடமும் சொன்னால் உன்னை கொன்று விடுவேன்” என சிறுமியை மிரட்டியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திமுக பிரமுகர் ராஜை காவல்துறையினர் "போக்சோ" சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.