ஒட்டுமொத்த உலகையே தனது கோரப்பிடிக்குள் சிக்கவைத்த கரோனா வைரசால் பலர் பாதிக்கப்பட்டு, தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளனர். ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் எனப் பலரும் பொதுமக்களுக்கு உதவிகள் செய்கின்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்திற்குள்பட்ட பூரணம்மாள் காலனி, லாயல் மில் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு திமுகவைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் செல்வி சந்தானம் ஏற்பாட்டில் ஐந்து கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தினமும் சுமார் 100 கிலோ அரிசியை மக்களுக்கு இவர் வழங்கிவருகிறார்.