தூத்துக்குடி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு இன்று (நவ.20) தூத்துக்குடியில் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒன்றிய அரசு மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறுவோம் என்று அறிவித்திருப்பதை முறையாக நாடாளுமன்றத்தில் அமல்படுத்த வேண்டும்.
விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum support price) கிடைப்பதற்கான சட்டத்தை கொண்டு வரவேண்டும். அதிகளவில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்பட அரசு நேரடியாக கொள்முதல் செய்வதை தொடர வேண்டும்.
பெட்ரோல் விலையை குறைப்பதற்காக கூடுதலாக வசூல் செய்யும் கலால் வரி, செஸ் வரி ஆகியவற்றை உடனடியாக குறைக்க வேண்டும்.
கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான வருவாய்த்துறையினர், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுத்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.