தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆறாம்கட்ட பரப்புரையை நேற்று (பிப். 17) மேற்கொண்டார். பரப்புரைப் பயணத்தின் முடிவாக தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்த திடல் அருகே நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
திமுக ஆட்சியில் மக்களுக்கா பாதுகாப்பு?
அப்போது அவர், "திமுக ஆட்சியில் சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா பேசும்போது அவரைப் பேசவிடாமல் புத்தகங்களைத் தூக்கி எறிந்தனர். தலை முடியைப் பிடித்து இழுத்தனர், ஜெயலலிதாவை அடிக்கவும் செய்தனர். எதிர்க்கட்சித் தலைவருக்குப் பாதுகாப்பில்லாதபோது மக்களுக்கா பாதுகாப்பு இருக்கப்போகிறது!
இதையெல்லாம் செய்துவிட்டு இப்போது மு.க. ஸ்டாலின் பேசுகிறார், எம்ஜிஆர் என் பெரியப்பா என்று. ஐந்து முறை ஆட்சியில் இருக்கும்போது மக்களுக்கு எதுவும் செய்யாத திமுக தற்போது ஆட்சியில் இல்லாதபோது மக்களைச் சந்தித்து மனுக்களை வாங்கிவருகிறது. மு.க. ஸ்டாலின் தேர்தல் வரும்போதெல்லாம் நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துவிடுவார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது இதேபோன்று வாங்கிய மனுக்கள் என்ன ஆயிற்று?
திட்டங்களைத் திட்டமிட்டுச் செய்யும் அதிமுக
அதேபோல்தான் இதுவும். மக்களுக்குப் பல நல்ல திட்டங்களைத் தொடர்ந்து அளித்துவரும் அதிமுகதான் தமிழ்நாட்டில் மீண்டும் வெற்றிபெறப் போகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னதுபோல அவருக்குப் பின்னால் இன்னும் 100 ஆண்டுகள் நிச்சயம் அதிமுக நல்லாட்சி நடக்கும். எனவே இன்னும் 100 ஆண்டு காலத்திற்கு மு.க. ஸ்டாலின் பெட்டியைத் திறக்க முடியாது.
13 ஆண்டு காலம் மத்திய அரசுடன் திமுகவினர் ஆட்சியில் இருந்துள்ளார்கள். நிதி ஆதாரம், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு எனப் புதிய திட்டம் என எதுவும் செய்யவில்லை. தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பதவி வேண்டும் என்பதற்காகவே கருணாநிதி டெல்லிக்குச் செல்வார். மக்களுக்காகச் செல்லவில்லை. ஆனால் எந்த ஒரு திட்டத்தையும் திட்டமிட்டுச் செய்யும் அரசு அதிமுக அரசு.
மருத்துவத் துறையில் சிறப்பு!