தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் மாணவனால் நெகிழ்ச்சியடைந்த தூத்துக்குடி சுப்பையா வித்யாலய பள்ளி - சுப்பையா வித்யாலய பள்ளியின் முன்னாள் மாணவர்

தூத்துக்குடி: சுப்பையா வித்யாலய பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் அந்தப் பள்ளிக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், தனது பெயரை வெளியிடவும் மறுப்புத் தெரிவித்துள்ளார். இவருக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Alumni of tuticorin  Subbaiah Vidyalaya donate assets worth Rs 2 crore to the school
Alumni of tuticorin Subbaiah Vidyalaya donate assets worth Rs 2 crore to the school

By

Published : Dec 25, 2020, 10:48 AM IST

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவியருக்கு உதவும் வகையில், இப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் தூத்துக்குடியில் தனக்குள்ள 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்தச் சொத்து மூலம் பள்ளிக்கு மாதம் 58 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளியின் செயலாளர் எம். முரளி கணேசன் கூறியபோது, "தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில், முன்னாள் மாணவர்களிடமிருந்து நிதி உதவி பெற்று ஏழை மாணவியருக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை மொத்தம் மூன்று லட்சத்து 60 ஆயிரத்து 300 ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது. இதன்மூலம் 91 மாணவியருக்கு கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தற்போதுவரை பெறப்பட்ட ஒன்பது லட்சத்து 30 ஆயிரத்து 700 ரூபாய் உதவித் தொகை நடப்பு கல்வியாண்டில் தகுதியான மாணவியருக்கு கட்டணமாகச் செலுத்தப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட 201 மாணவியரின் பெற்றோருக்கு 1000 ரூபாய் வீதம் இரண்டு லட்சத்து ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டபோது, செல்போன் வசதி இல்லாத 20 மாணவியருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவில் செல்போன்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டன. மேலும், 10, 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு செல்போனுக்கான இணையதள பயன்பாட்டுக்கு உதவும் வகையில் மாதம் தோறும் ரீசார்ஜ் செய்ய 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றுவரும் வேளையில், இதனை ஊக்கப்படுத்தும்விதமாக முன்னாள் மாணவர் ஒருவர் தனது 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஏழை மாணவியரின் படிப்புக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐடி நிறுவனம் ஒன்றில் மூத்த இயக்குநராகப் பணியாற்றும் அந்த நபர், சுப்பையா வித்யாலயம் தொடக்கப்பள்ளியில் 1973 முதல் 1978 வரை தொடக்கக்கல்வியை பயின்றுள்ளார். இவர், இரண்டு கோடி மதிப்பிலான தனது ஐந்து வீடுகளை முழுமையாக நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த வீடுகளின் வாடகை மூலம் பள்ளிக்கு மாதம் 58 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இந்த தொகை ஏழை மாணவியரின் கல்விக்காக பயன்படுத்தப்படும். நன்கொடை அளித்த நபர் தனது பெயர், விபரம் எதையும் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் அவரை பற்றிய மேலும் விவரங்களை தெரிவிக்க இயலவில்லை. அவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தொகை முழுக்க முழுக்க ஏழை மாணவியரின் கல்விக்காக பயன்படுத்தப்படும்" என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. ஞானகவுரி பேசும்போது, "தான் படித்த பள்ளிக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை கொடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அதுவும் தனது பெயர்கூட வெளியே தெரியக்கூடாது என நினைக்கும் அந்த நபரின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. இதுபோல பலரும் தாங்கள் படித்த பள்ளிக்கு ஏதாவது வகையில் உதவி செய்ய முன்வர வேண்டும்.

மேலும், இந்த உதவித் தொகை மூலம் பயன்பெறும் மாணவியரும் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைந்து, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை இதுபோல சமுதாயத்துக்கு வழங்க முன்வர வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.எம். சாந்தினி கவுசல், உதவி தலைமை ஆசிரியர் ஆர். விபாஸ்ரீ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் நிதிதிரட்டல்: தனிபட்ட நிதி தேவைகளுக்கு பணம் திரட்டலாம்!

ABOUT THE AUTHOR

...view details