தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு சிபிஐ குழுவினர் தமிழ்நாடு வந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ் பிரான்சிஸ் உள்பட மொத்தம் ஒன்பது கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்களுக்கு பிணை வழங்கக்கோரி மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ காவல்துறையினர் சாத்தான்குளத்தில் பல்வேறு இடங்களிலும், கோவில்பட்டி கிளை சிறை, அரசு மருத்துவமனை ஆகியவற்றிலும் தொடர்ந்து பல மாதங்களாக விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. அப்போது, இந்த வழக்கில் கைதான ஒன்பது காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.