தூத்துக்குடிபால்பாண்டி நகரைச் சேர்ந்தவர், ராஜன் மகன் பால்ராஜ்(48). இவர் முந்திரி பருப்புகளை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் இவர் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் முதல் தூத்துக்குடி சாலைப் பகுதியிலுள்ள ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து, அதில் முந்திரிபருப்பு மூட்டைகளை ஏற்றுமதி செய்வதற்காக வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆக.7ஆம் தேதி அன்று இரவு குடோனிற்கு இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர், அங்கு இருந்த வாட்ச்மேனை கத்தியைக் காட்டி மிரட்டி குடோன் ஷட்டரின் பூட்டை உடைத்துள்ளனர்.
பின்னர் அங்கு இருந்த 40 முந்திரி பருப்பு மூட்டைகளையும் சரக்கு வாகனத்தில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.
தற்போது இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.