தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 10, 2023, 9:27 PM IST

ETV Bharat / state

'வாங்கம்மா வாங்க.. குலுக்கல் பரிசு காத்திருக்கு’ - ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது

கோவில்பட்டியில் குலுக்கல் முறையில் பரிசு விழுந்ததாகக் கூறி 14 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் 3 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

'வாங்கம்மா வாங்க.. குலுக்கல் பரிசு காத்திருக்கு’ - ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது!
'வாங்கம்மா வாங்க.. குலுக்கல் பரிசு காத்திருக்கு’ - ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது!

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணியைச் சேர்ந்தவர், ராமசாமி என்பவரது மகன் ராமசுந்தரம் (40). இவர் கோவில்பட்டியில் உள்ள 4 கோயில்களில் அர்ச்சகராக இருந்து வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு ஆம்னி வேனில் வந்த நபர்கள், ராமசுந்தரத்திடம் மெத்தை, தலையணை மற்றும் பேன் ஆகியவற்றை 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல், அவரிடம் குலுக்கல் முறையில் பரிசு விழும் என்றும் கூறி ஆசைக்காட்டி உள்ளனர்.

கோவில்பட்டியில் குலுக்கல் முறையில் பரிசு விழுந்ததாகக் கூறி 14 லட்சம் ரூபாய் மோசடிக்கு உள்ளாக்கப்பட்ட ராமசுந்தரம் அளித்த பேட்டி

இது தொடர்பாக ராமசுந்தரத்தை தொடர்பு கொள்வதற்காக, அவரது செல்போன் எண்ணையும் அவர்கள் பெற்றுக் கொண்டுச் சென்றுள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து ராமசுந்தரத்தை தொடர்பு கொண்ட விற்பனையாளர்கள், ராமசுந்தரத்துக்கு இருசக்கர வாகனம் மற்றும் பல பரிசுகள் விழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் முன்பணம், வருமானவரி போன்றவை செலுத்த வேண்டியுள்ளது என்ற பல்வேறு காரணங்களைக் கூறிய விற்பனையாளர்கள் தரப்பு, ராமசுந்தரத்திடம் இருந்து பல வங்கி கணக்குகள் மூலம் சிறிது, சிறிதாக 14 லட்சத்து 28 ஆயிரத்து 860 ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளது.

பின்னர் தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த ராமசுந்தரம், இது தொடர்பாக NCRPஇல் (National Cyber crime Reporting Portal) புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி தலைமையிடத்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில், உதவி ஆய்வாளர் சுதாகரன் உள்பட காவல் துறையினர் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் பேரில், தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்ட தனிப்படை காவல் துறையினர், இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி கோரம்பள்ளம் சவேரியார்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துகுமார் (37) என்பவரை சென்னை வில்லிவாக்கத்தில் வைத்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் புல்லலங்கோட்டையைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் முனிரத்னம் (36) என்பவரை அவரது வீட்டின் முன்பு வைத்து தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மருதுபாண்டியன் (38) என்பவரையும் சங்கரன்கோவிலில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து கைதான நபர்களிடம் இருந்து 13 செல்போன்கள், 2 லேப்டாப், ஒரு டேப், ஒரு ஹார்டு டிஸ்க், 5 டெபிட் கார்டுகள், 2 டாங்கில் மற்றும் ரொக்கப்பணம் 20,000 ரூபாய் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றமத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், தொடர்ந்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கேலி, கிண்டலை தட்டிக் கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... வட மாநிலங்களை மிஞ்சிய கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details