தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணியாளர்களை நியமிக்காமல் அலட்சியம் - அமிலம் கொட்டி 2 மாணவர்கள் காயம்!

தூத்துக்குடி: இடையார்காடு பள்ளியில் ரசாயனங்களை அகற்றும்போது அமிலம் கொட்டி இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

By

Published : Dec 5, 2019, 9:33 PM IST

2 students hurt by acid poisoning
2 students hurt by acid poisoning

தூத்துக்குடி மாவட்டம் இடையார்காட்டில், நாசரேத் திருமண்டலத்திற்குச் சொந்தமான அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள தலைமையாசிரியர் பள்ளியிலுள்ள ரசாயன கூடத்திலிருந்து ரசாயனக் கலவையை மாணவர்களை வைத்து அகற்ற முயற்சித்துள்ளார்.

அப்போது, மாணவர்கள் முறையான கையுறைகள் அணியாமல் ரசாயன பாட்டில்களைக் கொண்டு சென்றுள்ளனர். அவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் கொண்டு சென்ற பாட்டில்களை மாணவர்கள் தவறி, கீழே போட்டுவிட்டனர். பின்னர் அவற்றை மாணவர்கள் அகற்ற முயற்சித்தபோது, வேல்ராஜ், மஹாராஜன், முருகப்பெருமான், ஜெயமுருகன், பிரமோத் பால், வாசுராஜன் ஆகிய மாணவர்களின் கைகளில் அமிலம்(ஆசிட்) பட்டதால் பலத்த காயமடைந்தனர்.

இதனையறிந்த தலைமையாசிரியர், அம்மாணவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தார். இதைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அம்மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகெளரியிடம் கேட்டபோது, மாணவர்களிடம் நடந்தது குறித்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா சென்றுள்ளதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பாக பள்ளியில் தாளாளரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கொண்டு ரசாயனம் அகற்றும் பணியில் ஈடுபட வைத்தது மிகத்தவறு என்றும் கூறினார்.

வழக்கறிஞர் லாரன்ஸ் கூறுகையில், “பள்ளியில் கழிவறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக பணியாளர்களை நியமிக்காமல் மாணவர்களை தொழிலாளர்களாகப் பள்ளி நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. அதேபோல, இன்று ரசாயன பாட்டில்களை முறையான பாதுகாப்பில்லாமல் மாணவர்களை அகற்ற பணித்துள்ளார்கள். அப்போது எதிர்பாராவிதமாக பாட்டில்கள் உடைந்து மாணவர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

அமிலம் கொட்டி காயமடைந்த மாணவர்கள்

இது குறித்து மாணவர்களின் பெற்றோரிடம் தகவலளிக்காமல் பள்ளி நிர்வாகம் மறைக்க முற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், ரசாயன பாட்டில்களை தாங்களே தெரியாமல் ஊற்றிக் கொண்டோம் என்று கூற வேண்டுமென்றும் நிர்வாகம் மாணவர்களை மிரட்டியுள்ளது. இதுபோன்ற தவறான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இப்பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ’நீங்க மட்டும்தான் இங்கிலீஸ் பேசுவீங்களா நாங்களும் பேசுவோம்’ - அரசுப் பள்ளி மாணவர்கள்

ABOUT THE AUTHOR

...view details