தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு போதைப் பொருள் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜூடி மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (ஆக.28) தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் ஒன்றன்பின் ஒன்றாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் கார்களில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த ஞானம் மகன் ஆரோன்(31) மற்றும் அவரது மனைவி சிபானியா(31), தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்த அய்யாத்துரை மகன் இசக்கி கணேஷ்(29), இலங்கை நாட்டைச் சேர்ந்த தற்போது சென்னை நுங்கம்பாக்கம் பகுதியிலிருந்த வின்சன் பினிஷ் மகன் ஜோசப் ஸ்ரீபாலன் கெனியு பினிஷ்(63).
தூத்தக்குடி அண்ணாநகரை சேர்ந்த சின்னத்துரை மகனான தூத்துக்குடி பாமக மாவட்ட இளைஞரணி தலைவர் மூக்காண்டி (எ) ராஜா(30), கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஜான் மகன் சஜின் ரெனி(35), திருநெல்வேலி மாவட்டம் பாட்டப்பத்து பகுதியை சேர்ந்த இசக்கிதாஸ் மகள் ஸ்ரீமதி இந்திரகாந்தி(23), சென்னை பரங்கிமலையை சேர்ந்த மாணிக்கம் மகன் தயாளன்(45), தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகனான சாத்தான்குளம் ஒன்றிய பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் மணிகண்டன்(32).
தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர்களான முனியசாமி மகன் காளீஷ்வரன்(24), ஈனமுத்து மகன் விக்னேஷ்வரன்(29), மாரியப்பன் மகன் திருமேனி(29), சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சம்பத்குமார்(50), கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டிணம் பகுதியை சேர்ந்த முத்து கிருஷ்ணன் மகன் சரவணன்(45) ஆகியோர் சேர்ந்து கார்களில் கஞ்சா கடத்தியது தெரிய வந்தது.
மேலும் இவர்களுடன், செல்லும் வழியில் போலீசார் இருப்பது குறித்து தகவல் தெரிவிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் திருமணிக்குமரன்(27) மற்றும் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த மந்திரம் மகன் அருண்குமார்(27) ஆகியோர் கஞ்சா கடத்துவதற்கு உதவியதும் தெரியவந்தது.