திருவாரூரில் கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கொரடாச்சேரி அருகே செட்டிசிமிலி கிராமத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி(49) அதிகாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது வீட்டின் ஒருபக்கச் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோன்று கொரடாச்சேரி அருகே பூங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லையன் அவரது கூரை வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் போது, சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவலர்கள் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர்.