தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’உயிர் இருக்கும்வரை ஏழைகளுக்கு உணவளிப்போம்’ - பசியாற்றும் தம்பதி! - பசிப்பிணி ஆற்றும் தம்பதிகள்

திருவாரூர்: "ஏழை, எளிய மக்கள் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக எங்களின் சொந்த பணத்திலிருந்து உணவு வழங்கிவருகிறோம். அவர்கள் சாப்பிடுவது எங்களுக்கு மனநிறைவை அளிக்கிறது. எங்கள் உயிர் மூச்சு இருக்கும்வரை நாங்கள் ஏழைகளுக்கு உணவளித்துக் கொண்டேதான் இருப்போம்" என்கின்றனர் வள்ளலார் மீது பற்றுகொண்ட தம்பதியினர்.

thiruvarur
thiruvarur

By

Published : May 26, 2020, 4:22 PM IST

திருவாரூர் மாவட்டம் வாளவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் ரவி, இவருடைய மனைவி நதியா. நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்திவரும் இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

வள்ளலார் பற்று

கணவன், மனைவி இருவரும் வள்ளலார் மீது, அதீத பற்றுகொண்டவர்கள். ’ஏழைகளின் பசியைப் போக்குவதே ஜீவகாருண்யம்’ என்ற வள்ளலாரின் சொல்லுக்கு ஏற்ப, கடந்த ஒரு வருடமாக ஏழை, எளிய மக்களின் பசியை இவர்கள் போக்கிவருகின்றனர்.

ரவி, நதியா தம்பதியினர்

நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, பசியில் வாடுவோருக்கு நாள்தோறும் மதிய உணவை இலவசமாக கொடுப்பதை, இவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

தற்போது ஊரடங்கால் வருமானம் இல்லாதபோதிலும், இவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகச் சேமித்துவைத்த பணத்தைக் கொண்டு, பசியால் வாடுவோரின் வயிற்றை நிறையவைக்கின்றனர் இந்தத் தம்பதியினர்.

காலை 8 மணிக்கு சமையல் பணியைத் தொடங்கும் தம்பதி, மதியம் 12 மணிக்குள் சாம்பார், ரசம், மோர், பொரியல் போன்ற அறுசுவை உணவை சமைத்து முடிக்கின்றனர்.

உணவு பரிமாறும் பணியில் ரவி

அதன்பின்னர் அவற்றை திருவாரூர் அரசு மருத்துவமனை முன்பு வரக்கூடிய பொதுமக்களுக்கும், புறநோயாளிகளுக்கும் வழங்குகின்றனர்.

தம்பதியினர் வழங்கும் இலவச உணவை நம்பி 200 முதல் 300 பேர் வரை தினமும் மருத்துவமனை வாசலில், மதிய நேரத்திற்குச் சரியாக வந்துவிடுகின்றனர்.

பசி ஆறும் மக்கள்

தங்களுடைய இந்தச் சேவை குறித்து நதியா, “இவ்வளவு நாள் உணவு வழங்கியபோது இல்லாத மகிழ்ச்சி, இந்தக் கரோனா நேரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும்போது கிடைக்கிறது” என்று பெருமிதத்துடன் கூறினார்.

உயிர் மூச்சு

”ஏழை, எளிய மக்கள் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக எங்களின் சொந்த பணத்திலிருந்து உணவு வழங்கிவருகிறோம். அவர்கள் சாப்பிடுவது எங்களுக்கு மனநிறைவு அளிக்கிறது.

எங்கள் உயிர் மூச்சு இருக்கும் வரை நாங்கள் ஏழைகளுக்கு உணவளித்துக்கொண்டேதான் இருப்போம்” என்று கூறும் ரவியின் கண்களில் நம்பிக்கைக் கீற்று பிரகாசிக்கிறது.

பசிப்பிணி ஆற்றும் தம்பதிகள்

’பசிக்கு உணவளித்தவன் பெரும் புண்ணியத்தைப் பெறுவான்’ என்ற வள்ளலாரின் பொன்மொழியையே இவர்களுக்கு நாமும் வாழ்த்தாகக் கூறிக்கொள்வோம்.

இதையும் படிங்க:ஊரடங்கால் அவதி - ஏழைகளின் பசியை போக்கும் புதுக்கோட்டை இளைஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details