‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ - எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின்! - MK Stalin final phase campaign at thiruvarur
திருவாரூர்: ஸ்டாலின் காது சவ்வு கிழிந்து தொங்கும் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார், ஆனால் தேர்தலுக்கு பின் இவர்கள் அரசியல் வாழ்வு சவ்வு கிழிந்து தொங்க போகிறது எனத் திருவாரூர் பரப்புரையில் ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் பரப்புரையின் கடைசி நாளான இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் மீண்டும் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, ’தேர் ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து நிற்பது போல, எனது பரப்புரையைக் கடந்த மாதம் 20ஆம் தேதி திருவாரூரில் தொடங்கினேன், மீண்டும் தொடங்கிய இடத்திலேயே எனது பரப்புரையை நிறைவு செய்கிறேன்.
மத்தியில் மோடி ஐந்தாண்டுக் காலம் ஆட்சியிலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிச்சாமி எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளார். ஆனால் இந்த ஆட்சிக் காலத்தில் அவர்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்காமல் மீண்டும் வாக்குறுதிகளைக் கொடுத்து வருகின்றனர். காரணம் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.
நான் பரப்புரையைத் தொடங்கியது முதல் எடப்பாடியிடம் ஜெயலலிதா இறப்பு மர்மம், கொடநாடு கொலை வழக்கு, பொள்ளாச்சி விவகாரம் என இந்த மூன்று கேள்விகளைக் கேட்டு வருகிறேன். ஆனால் இதுவரை அதற்குப் பதிலளிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இச்சம்பவங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைச் சிறைக்கு ஸ்டாலின் அனுப்புவேன் என உறுதி அளிக்கிறேன்.
எடப்பாடி பழனிச்சாமி இந்த கேள்விகளுக்குப் பதில் கூறாமல் ஆத்திரத்தில் எனது காது சவ்வு கிழிந்து விடும் எனச் சொல்கிறார். பதிலுக்கு எனக்கும் சொல்லத் தெரியும், ஆனால் கலைஞர் எங்களை அப்படி வளர்க்கவில்லை. ஆனால், தேர்தல் முடிந்தவுடன் அவர்களுக்கு அரசியல் சவ்வு கிழிந்து விடும்’ என்று கூறினார்.
TAGGED:
STALIN_FINAL_CAMPAIGN