திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தற்போது குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 எனப் பல ஆயிரம் ரூபாய் கமிஷன் பெறுவதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் வரத் தொடங்கின.
இதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கண்ணாரபேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர் நந்தகோபாலன் தலைமையில் லாரியை சிறைப்பிடித்து இரவு முதல் விடிய விடிய நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.