திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவரிடம் விசாரிக்கையில், விழுப்புரம் மாவட்டம் ரவுத்தங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவி. அவருக்கும் திண்டிவனம் கடப்பேரி குப்பம் பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.
தமிழ்வாணன் மது போதைக்கு அடிமையானவர் என்பதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. அதனால் மனமுடைந்திருந்த தேவிக்கும், திண்டிவனத்தை சேர்ந்த காவலர் செந்தமிழ்ச்செல்வன் என்பவரும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து செந்தமிழ்ச்செல்வன் தேவியிடம் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி அவரது குழந்தைகளுடன் திண்டிவனம் அழைத்துச் சென்று இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்துள்ளார்.