தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடிப்பெருக்கு விழா: திருவண்ணாமலை, சென்னியம்மன் கோயிலில் உற்சாகமாய் கொண்டாடிய மக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், நீப்பத்துறை கிராமத்தில் உள்ள சென்னியம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 3, 2023, 9:42 PM IST

Updated : Aug 3, 2023, 9:49 PM IST

சென்னியம்மன் கோயில்

திருவண்ணாமலை:தமிழர்களின் பாரம்பரியமிக்க ஆடி 18ஆம் பெருக்கு விழா காவிரிக் கரை, முக்கிய நீர் நிலைகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தென்மேற்குப் பருவத்தில் ஆற்றின் நீர் பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும்.

இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். இதற்காக உறுதுணையாக இருக்கும் தண்ணீரை தெய்வமாக மதித்து, நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டில் "ஆடிப்பெருக்கு விழா" கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நீப்பத்துறை ஸ்ரீ சென்னியம்மன் ஆலயத்தின் 78ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் பக்தர்கள் நீராடி பொங்கல் வைத்து நேர்த்திக் கடனை செலுத்தி வணங்கி வழிபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறை அலமேலுமங்கை பத்மாவதி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், சென்னியம்மன் மற்றும் ஆளுடையான் தேவஸ்தான கோயிலில் 78ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினந்தோறும் காலை, மாலை என இருவேளைகளிலும் சாமி சிம்ம வாகனம், அனுமந்த வாகனம் மற்றும் கருட வாகனம் என்று சாமி திருவீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

ஆடி மாதம் 18ஆம் தேதியான இன்று (ஆகஸ்ட் 03) ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து விஷேச பூஜைகள் நடைபெற்றன. இந்த ஆடிப்பெருக்கு விழாவிற்காக தமிழகத்தில் சேலம், தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ஓசூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

தமிழகம் மட்டும் இன்றி பெங்களூரு, கேரளா மற்றும் புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீப்பத்துறைக்கு வருகை தந்தனர். மேலும், தென்பெண்ணை ஆற்றில் நீராடி, ஆற்றின் கரையிலேயே பொங்கல் வைத்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி சென்னியம்மனை வணங்கி வழிபட்டனர்.

ஆடிப்பெருக்கு விழாவிற்கு பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை ஆலயத்தின் பாரம்பரிய அறங்காவலர் கோகுலவாணன் குடும்பத்தினர் செய்திருந்தனர். நீப்பத்துறை ஆடிப்பெருக்கு விழாவிற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம், திருவண்ணாமலை மண்டலத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அண்ணாமலைக்கு 'மெக்கா மதீனா' புகைப்படம், தக்காளி மாலை அன்பளிப்பு - பாதயாத்திரையில் ருசிகர சம்பவங்கள்!

Last Updated : Aug 3, 2023, 9:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details